தனித்தமிழ் வளர்ப்போம்


Wednesday 30 December 2015

ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

              கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 19 July 2015

பி.எட்., மாணவர் சேர்க்கை - வெயிட்டேஜ்விதிமுறைகள் அறிவிப்பு


இந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


          இம்மாத இறுதியில், பி.எட்., மாணவர் சேர்க்கையைத் துவங்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. அதற்காக, புதிய விதிமுறைகளை, தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்: 

* பி.எட்., படிப்பில் சேர, ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும். 
*எம்.பில்., - பிஎச்.டி., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும், சேர முடியும். 
* இளங்கலை படிப்பில், முன்னேறிய வகுப்பினர், 50; பிற்படுத்தப்பட்டோர், 45; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 43; தலித் மற்றும் அருந்ததியர், 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 
* விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். முதுகலை, 4; எம்.பில்., 5; பிஎச்.டி., 6 என 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.  
* மேலும், 19 வகையான, 'ஆப்ஷனல்' பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
* பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து11ம் ஆண்டு நினைவு நாளில் கதறல்- ஜூலை, 16ம் தேதியை, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

        கும்பகோணம் பள்ளி தீ விபத்தின், 11ம் ஆண்டு நினைவு தினமான நேற்று, குழந்தைகள் படத்தின் முன், மலர் வளையம் வைத்து, பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த, 2004ம் ஆண்டு, ஜூலை, 16ம் தேதி, கோர தீ விபத்து ஏற்பட்டது. 
 
          இதில், 94 குழந்தைகள் தீயில் கருகி சாம்பலாயினர்.இந்த கொடும் சம்பவத்தின், 11ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தீ விபத்து நடந்த பள்ளி முன், விபத்தில் இறந்த குழந்தைகளின் படத்துடன் கூடிய, 'டிஜிட்டல் போர்டு' வைத்து, பெற்றோர், உறவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
          பெற்றோர், குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும், குழந்தைகளின் புகைப்படம் முன் வைத்தும், அவர்களை அடக்கம் செய்த இடத்துக்கு சென்று, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி வெங்கட்ராமன், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். எழுத முடியவில்லை!: தீ விபத்தில், படுகாயம் அடைந்த, 18க்கும் மேற்பட்ட குழந்தைகள், அரசு உதவியுடன், சென்னை, அப்ேபாலோ மருத்துவமனையில், உயர்தர பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், தீ விபத்தின் அடையாளம் அழியவில்லை.விபத்தில் பாதிக்கப்பட்டு, தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவி கவுசல்யா கூறியதாவது: 
விபத்தில், என் வலது கை முழுவதும் காயமடைந்தது. இதனால், என்னால் நீண்ட நேரம் எழுத முடியவில்லை. தொடர்ந்து, 10 நிமிடம் எழுதினாலே, கை வலிக்கிறது. விடை தெரிந்தும், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு உதவவில்லை!: மாணவி மெர்சி ஏஞ்சல் மேரியின் தந்தை மரியநாதன் கூறுகையில், ''மகளுக்கு, கால்கள் மட்டுமல்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அதன் வடுக்கள், இப்போதும் உள்ளன. சிகிச்சைக்கு, அரசு எந்த உதவியும் அளிக்கவில்லை,'' என்றார். 

வழக்கின் முடிவு!: பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், கடந்தாண்டு ஜூலை, 30ம் தேதி, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம், கிருஷ்ணா பள்ளியின் நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, தலைமையாசிரியை சாந்தலட்சுமி உட்பட, எட்டு பேருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.குழந்தைகள் பாதுகாப்பு தினம்!: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் நலச்சங்க செயலர் இன்பராஜ் கூறியதாவது:என் இரு மகன்கள் பிரவின்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர், மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இருவரையும் ஒரே நேரத்தில் நான் பறிகொடுத்தேன்.அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பர். அவர்களுடன் படித்தவர்கள், தற்போது கல்லூரிக்கு செல்லும் போது பார்த்தால், எங்களுக்கு துக்கம் தான் வருகிறது. 

ஜூலை, 16ம் தேதியை, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அங்கீகாரமின்றி இயங்கும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை மூட வேண்டும்' - TNPTF


விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அங்கீகாரமின்றி இயங்கும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை மூட வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திண்டுக்கல்லில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்றனர். மோசஸ் கூறியதாவது: கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கலந்தாய்வு துவங்கியது. ஏற்கனவே ஓராண்டு பணியில் உள்ள ஆசிரியர்களும் இதில்பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 3 ஆண்டுகள் பணிபுரிந்துஇருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிப்பது வேதனையளிக்கிறது. அரசியல் தலையீடின்றி ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்தில் 20 ஆண்டுகளாக பல பெற்றோரை ஏமாற்றி, அங்கீகாரமின்றி பலஆயிரம்சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் இல்லாத மெட்ரிக்பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 10 மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படும் எனக்கூறி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி 3,500 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி அறிமுகமானது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியையும் பிறஆசிரியர்களே கற்பிக்கின்றனர். எனவே, ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், என்றார்.

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க 10 பாடங்களில் சிறப்பு பயிற்சி

          பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட 10 பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


கடந்த மே மாதம் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறித்துமாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் பிரிவு மாணவர்களைவிட கலைப்பிரிவு மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறாததால் சதவீதம் குறைந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு, தொழிற்கல்வி பிரிவு உள்ளிட்ட ௧௦ பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இந்தாண்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,:''பிளஸ் 2வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம்குறைவான பள்ளிகள் குறித்த 'லிஸ்ட்' தயாரிக்கப்பட்டுள்ளது.

''சென்னையில் உள்ள மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் இப்பாடங்களில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பிற ஆசிரியர்களுக்குமாணவர்களிடம் கற்றல் குறைகளை கண்டறிந்து அதை அதிகப்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்படும். அதன்பின் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர். இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது,''என்றார்.

பி.எட்., படிப்பில் புது விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவு

       தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., போன்ற படிப்புகளுக்கு, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.இந்த விதிகளின் படி, அனைத்து ஓராண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளும், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளன.
பாடத்திட்டமும் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கணினி அறிவியல், யோகா, விளையாட்டு போன்ற பல பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த விதிமுறைகள் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று, ஆசிரியர் கல்வியியல்கல்லுாரிகள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நிலுவையில்உள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநிலங்களும், புதிய விதிமுறைகளை, புதிய கல்விஆண்டில் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என, எச்சரித்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு, 690 கல்லுாரிகளுக்கு இரண்டாண்டு படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.இரண்டாண்டு ஆசிரியர் படிப்பு, இந்தாண்டு முதல் அமலாகும்; புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டுமென்றும், தமிழக அரசு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன், அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், 'வரும் புதிய கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், மத்திய அரசின், 2014 புதிய விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த உத்தரவு மாறுபடும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

 பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும்பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத்தேர்வுகளின்முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவியஅளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றிமுழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிறமாணவ, மாணவிகள் நம் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான்.

        ஆனால்இந்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே பள்ளிக் கூடத்தின் பக்கம்போகவே முடியாமல்போனதப்பித்தவறிப் போனாலும் தங்களது படிப்பைப்பாதியிலேயே கைவிட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்குச் சென்று சீர்குலைந்துபோய்விடுகிறநமது நாட்டின் கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பற்றியஎத்தகையக் குரல்களும் நம்மிடமிருந்து பெரிதாக எழுவதில்லைஎழுந்தாலும்எடுபடுவதில்லை.
அனைத்து வகையான ஊடகங்களிலும்அவற்றில் முன்வைக்கப்படுகிறவிளம்பரங்களிலும்பள்ளிக் கல்வி நிறுவனங்களின் சுவரொட்டிகளிலும்,ஆங்காங்கே லட்சக்கணக்கில் வாரியிறைக்கப்படுகின்ற துண்டறிக்கைகளிலும்,பெருமிதங்கள் நிறைந்த நேர்காணல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றமதிப்பெண் முழக்கங்களை அறிய நேரும்போதுஇந்த நாட்டில் எல்லாப்பிள்ளைகளும் படித்துக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் மின்னுகிறது.
நியாயமாகப் பார்க்கப் போனால் இந்த நாட்டில் படிக்கப் போகாதபள்ளிப்படிப்பைக்கூடப் பாதியிலேயே கைவிட்டுவிட்டபல லட்சக்கணக்கானபிள்ளைகளைப் பற்றிய வேதனை முழக்கங்கள்தான் அதிக அளவில்எழுப்பப்பட்டிருக்க வேண்டும்இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றாலும் இந்த உலகத்தையே அழிப்போம்என்று முழங்கிய பாரதியின் அறச்சீற்றம் தனியொரு குழந்தைக்குக் கிடைக்கப்பெறாத கல்விக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்எந்தவொரு துறையிலும்வெற்றிகளை நோக்கிய நமது இந்திய மக்களின் ஓட்டப் பந்தயத்தில்தோற்கடிக்கப்பட்டு துவண்டுபோய்க் கிடப்பவர்களைக் குறித்துச் சிந்திக்கயாருக்கும் நேரமில்லைஅதற்கு விருப்பமும் இல்லை.
சகல துறைகளிலும் தோற்றுப் போனவர்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டவர்கள்ஒரு பக்கம் இருக்கட்டும்இங்கே வெற்றிகள் எனப்படுவதெல்லாம்வெற்றிகள்தானா என்றால் அப்படியும் இல்லை.
கல்விபொருளாதாரம்வேளாண்மைவிளையாட்டுஅரசியல்சினிமா என்றுநமது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளும்வெற்றிகளும் இன்றைக்குக் கொடும்சாபங்களாக மாற்றப்பட்டிருக்கின்றனகல்வியில் நாம் பெற்றிருக்கும் வெற்றிதாய்மொழிவழிக் கல்விக்கு மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
வேளாண்மையில் பெற்ற வெற்றி மண்ணை மரணிக்கச் செய்துவிட்டன.பொருளாதாரத்தில் பெற்ற வெற்றி கணிசமான அளவில் பசிப் பிரிவினரைஉருவாக்கி ஒதுக்கி வைத்திருக்கிறது.
விளையாட்டில் பெற்ற வெற்றி மிகக் கேவலமான சூதாட்டங்களுக்கும்சிலசுயநலக் கிருமிகளின் சூறையாடல்களுக்கும் வழிவகுத்திருக்கின்றனஅரசியலில்பெற்ற வெற்றி மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கிறது.திரைப்படத் துறையில் பெற்ற வெற்றி மிகவும் இழிவான கலாசாரச்சீர்கேடுகளுக்கு வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.
விடுதலைக்குப் பிறகான நமது ஜனநாயகத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள்தாங்கள் பெறவேண்டிய வாழ்வியல் வெற்றிகளை இன்றுவரை பெறவில்லை.இங்கே எந்த வெற்றியும் மக்களுக்கானதல்லமக்களை முன்நிறுத்திக்கொண்டிருக்கும் வலிமையான ஒரு சில வணிகர்களுக்கானது.
ஆண்டுதோறும் மே மாதத்தில் போடப்படுகிற பொதுத் தேர்வு மதிப்பெண்கள்தொடர்பான கூச்சல்களும் மேற்படி வணிக வெற்றி வகையைச் சேர்ந்தவைதான்.
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிற மாணவர்கள் தாங்கள்படித்த பள்ளிகளுக்கு வளமான வணிக வெற்றியைத் தேடித் தருகிறார்கள்ஆனால்,அவர்கள் பின்னாளில் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப வாழ்வில் வெற்றியடையஇருக்கிறார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
வணிகத்தில் இரண்டு வகை உண்டுதானே நேரடியாகச் செய்யும் வணிகம்.தன்னைச் சார்ந்தவர்களை முன்வைத்துச் செய்யும் வணிகம்இதில் இரண்டாம்வகையைச் சேர்ந்தது இன்றைய பள்ளி கல்வி வணிகம்.
ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறுகிற பலலட்சக்கணக்கான மாணவர்களும்அவர்களில் மிக அதிக மதிப்பெண்களைப்பெற்றவர்கள் என்று முன்னிறுத்தப்படுகின்ற மாணவர்களும் ஆங்கிலவழிக் கல்விவணிகத்துக்கான ஊதுகுழல்களாகவும்அவர்களது தாய்மொழியான தமிழ்,கல்விக்கு உகந்தமொழி அல்ல என்பதை நிறுவுவதற்காகவும் தொடர்ந்துபயன்படுத்தப்படுகிறார்கள்.
மதிப்பெண் கூச்சல்கள் மிகுந்து ஆங்கிலவழிக் கல்வி என்பதுவணிகமயமாகிப்போன இன்றையக் காலக்கட்டத்தில் சில கேள்விகளைஎழுப்பியாக வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
ஆங்கிலவழிக் கல்வி வணிக முறை தலைதூக்கிமதிப்பெண் கூச்சல்கள்பேரோசையாக ஒலிக்கத் தொடங்கியுள்ள கடந்த முப்பது ஆண்டுகளில்அதிகமதிப்பெண் பெற்றவர்களாக முன்னிறுத்தி விளம்பரப்படுத்தப்பட்டபல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்றைய வாழ்க்கையில் எந்தெந்தஇடங்களில் இருந்து என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அவர்களைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் எந்த வகையிலும்வெற்றியடைய முடியவில்லை என்று நிறுவ முடியுமா?மாணவர்களுக்கிடையிலேயும்கல்வி நிறுவனங்களுக்கிடையிலேயும்நடத்தப்படுகிற ஒரு போட்டியைக் கல்வி முறை என்று சொல்ல முடியுமா?
அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கணிசமான ஊதியத்தில் நல்லவேலைகளைச் செய்கிறார்கள் எனில்அவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள்அவர்களைக் காட்டிலும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப்பெற்றவர்களா?
தங்களது பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின்உயர்கல்விக்கும்வேலைவாய்ப்புகளுக்கும் தொடர்புடைய பள்ளிகள்எவ்வகையிலேனும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனவா?
கல்வி என்பது அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குக் கைதட்டிஅவர்களுக்குஇனிப்பு ஊட்டுவதாஅல்லது கற்க முடியாமல் இருப்பவர்களைக் கைதூக்கிவிடுவதா?
இன்றைய மனப்பாடக் கல்வி முறையில்அதுவும் வேறு ஒரு மொழியிலானகல்வி முறையில் தேர்வுக் காலங்களிலும்தேர்வு முடிவுகள் வெளிவரும்நாளிலும் மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் அழுத்தங்களுக்கும்தாழ்வுமனப்பான்மை உணர்வுகளுக்கும்மாணவர்களின் தற்கொலைகளுக்கும்அவர்கள்சந்திக்க நேரும் ஒப்பீட்டு அவமானங்களுக்கும் யார் பொறுப்பேற்றுக் கொள்வது?
அறிவியல்உளவியல்சமூகவியல்மொழியியல் பூர்வமான கல்வி முறையாகஇருக்கக் கூடிய தாய்மொழிவழிக் கல்வி முறையை அறவே ஒழித்துக் கட்டவும்,மேற்கூறிய அனைத்துக்கும் புறம்பான ஆங்கிலவழிக் கல்வி முறையைநியாயப்படுத்தவும்தான் மதிப்பெண் கூச்சல்கள் போடப்படுகின்றனவா?
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் அடுத்து மருத்துவம்படிக்கவும்மிஞ்சிப் போனால் ஆட்சி நிர்வாகவியல் படிக்கவும் மட்டுமேஆசைப்படுகிறார்களேஅது ஏன்?
இவ்விரண்டு வகைப் பணிகளுக்கு மட்டும்தான் நமது சமூகத்தில் பற்றாக்குறைநிலவுகிறதா?
வேளாண்மைஇசைஓவியம்சிற்பம்பொதுச்சேவைகள்இலக்கியம்,சொற்பொழிவுவிளையாட்டுசுயதொழில்சுற்றுச்சூழல் பாதுகாப்புபழ உற்பத்தி,பால் உற்பத்திபசுமாடு வளர்ப்புநீர் நிர்வாகவியல் போன்றெல்லாம் நீளுகின்றவாழ்வாதாரக் கல்விக் கூறுகள் யாவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள்கற்கக்கூடாத கல்வி வகையினங்களா?
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதித்தேர்ச்சி பெறுகின்றனர்அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மிக அதிகமானமதிப்பெண்களைப் பெறுகின்றனர்ஆனாலும்இவர்களில் எத்தனை பேர் இந்தியஅளவிலான எய்ம்ஸ்..டிபோன்ற அதி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துகல்வி பெற முடிகிறது?
அப்படியெனில்இந்த மதிப்பெண் வெற்றி முழக்கமெல்லாம் தமிழ்நாட்டுஎல்லைக்குள் மட்டும்தானா?
உயர்கல்வி பெறும் பொருட்டுத் தமிழ்நாட்டை விட்டுத் தாண்ட முடியாதஆங்கிலவழிக் கல்வி எதற்காக?
தனித்தனித் திறமைகளைக் கொண்ட மாணவர்கள்அவரவர் தனித்திறமைகளுக்கேற்ப உருவாக்கப்பட வேண்டியவர்களாஅல்லது சுயசிந்தனையற்று அச்சிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுகிறஇயந்திரங்களாக மாற்றப்பட வேண்டியவர்களா?
கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ் மரபுவழிப் பிள்ளைகளை அவர்களதுதாய்மொழியில் இருந்து துண்டித்துஅவர்களைத் தாய்மொழி மறந்தவர்களாகமாற்றியதைத் தவிரஇன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?
இன்னமும் இவை போன்ற வினாக்கள் விடை சொல்வாரின்றி நீள்கின்றன... நீண்டுகொண்டேயிருக்கின்றனமனப்பாட மதிப்பெண் முறையும்அதைக் கூவிக் கூவிக்கொண்டாடும் போக்கும் தமிழ்ச் சமூகத்தை மாபெரும் பள்ளத்தாக்கில் வீழ்த்திக்கொண்டிருப்பதை அரசும்அடிப்படைகளற்ற ஆங்கில மோகம் கொண்ட மக்களும்இன்னும் முறையாக உணரவில்லை.

ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போதுமாநிலமெங்கும் ஒரு பரபரப்பும்பதற்றமும் நிலவுகின்றனதான் தேர்ச்சி பெறாமல்போய் விடுவோமோ என்று அஞ்சிய ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதும்தேர்வு முடிவில் அவர் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றிருந்த கொடுமையும்கூட அண்மையில் அரங்கேறியிருக்கிறது.

உண்மையானமுறையான தமிழ்வழிக் கல்விமாணவர்களின் தனித்திறன்களைமெருகேற்றும் கல்விமுழுமையான அரசுப் பள்ளிக் கல்விமுறையான சமச்சீர்கல்விஅனைத்துப் பொருளாதாரத் தரப்பினருக்குமான அருகமைக் கல்வி,சுகமான கல்விசுமையற்ற கல்விகட்டணமில்லாத கல்விமாணவர்களுக்குஉளைச்சல் தராத கல்விதுறைசார்ந்த பணிகளுக்கு உத்தரவாதம் தரும் கல்வி,மாணவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் கல்விமாணவர்களின் பெற்றோரைவதைக்காத கல்விதனிப்பயிற்சிக்கு என்று பணத்தை தண்டம் கட்ட வைக்காதகல்விவிளையாட்டுகளோடும்கலைஇலக்கியங்களோடும் இரண்டறக் கலந்தகல்விசூழலியல் கல்விவாழ்வியல் கல்விஅறநெறிகளைப் புகட்டிமாணவர்களை அறவுணர்வு மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி ஆகியவையேஇன்றைய தேவை.

கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ்
மரபுவழிப் பிள்ளைகளை அவர்களது தாய்மொழியில் இருந்து துண்டித்து,அவர்களைத் தாய்மொழி
மறந்தவர்களாக மாற்றியதைத் தவிர,

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

வரிகள், கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம்: 22 மாவட்டங்களில் 152 இ-சேவை மையங்கள் - முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

      பொதுமக்கள் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஒரே இடத்தில் செலுத்தவும் வருவாய்த்துறை சான்றுகளை பெறவும் வசதியாக 22 மாவட்டங்களில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 152 இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
           சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்தவும் இதர சேவைகளை பெறும் வகையிலும் சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப் படும் என்று 2014-15-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகரில் 14 இ-சேவை மையங்கள் மற்றும் இ-சேவை இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதன்மூலம் இதுவரை சுமார் 52 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, எல்காட் நிறுவனம் மூலம் கரூர் மாவட்டம் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூ ராட்சி அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த15-ம் தேதி தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.இதேபோல சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, நெல்லை உட்பட 22 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

இந்த மையங்களில் வருமானம், சாதி, இருப்பிடம் மற்றும் குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கான சான்று உட்பட வருவாய்த்துறையின் அனைத்து சான்றிதழ் வழங்கும் சேவைகளும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் வழங்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thursday 28 May 2015

திருக்குறளில் அறம்



திருக்குறளில் அறம்
திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூல். தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நூல். 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் அறநூல்.
வேதாத்திரி மகரிஷி அவர்களும் 50 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விளக்கங்களாக ஒரு நூல் வெளியிட்டுள்ளார்கள். ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்ற தலைப்பில் வள்ளுவரின் உள்ளக் கருத்தை அப்படியே காட்டியுள்ளார்.
வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் துறவறம் எனப் பகுத்து இல்லறத்துக்கு முதன்மை கொடுத்து இருவகையாருக்கும் தனித்தனியாகவும் பொதுவாகவும் அறங்கள் கூறியுள்ளர். அருட்தந்தை வேதாத்திரி மாத்துறவி அவர்களின் கருத்துக்களையும் மனதில் கொள்வோம். வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரம் 4 அதிகாரங்கள் , இல்லறவியல் 20 அதிகாரங்கள், துறவறவியல் 13 அதிகாரங்கள், ஊழ் 1 அதிகாரம், என 38 அதிகாரங்கள் செய்துள்ளார். இதில் அறம் என்பதற்கு விளக்கமாக முத்திரை பதித்தாற்போலும் வைர வரிகள் சில உள்ளன.
வள்ளுவர் இறைவனை ‘அறவாழி அந்தணன்’ என்றும் அவர் பண்பை ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றும் குறிப்பிடுகிறார்.
“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறம்”
“அறத்தினூங்கு ஆக்கம் இல்லை”
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்”
“அன்றறிவாம் என்னாது அறம் செய்க”
“அறத்தான் வருவதே இன்பம்”
“செயற்பால தோரும் அறனே”
“அறன் இல்வாழ்க்கைப் பயன்”
“அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோன்மையுடைத்து”
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை”
“அறத்திற்கும் மறத்திற்கும் அன்பு சார்பு”
“அன்பிலதனை அறம் காயும்”
“இன்சொல் இனிதே அறம்”
“நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும்”
“கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம் பார்க்கும்”
“அறன் இயலான் பிறன் இயலாள் பெண்மை நயவாதவள்”
“அழுக்கறுப்பான் அறன் ஆக்கம் வேண்டாதான்”
“அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திரு”
“அறமுடையான் புறங்கூறான்”
“பிறன்கேடு சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”
என்ற குறள் வரிகள் அறத்தின் இலக்கணத்தையும் அதன் மேன்மையையும் உணர்த்துவன.
இல்வாழ்க்கை என்ற ஐந்தாம் அதிகாரம் முதல் புகழ் என்ற 24 ஆம் அதிகாரம் வரை இல்லற மாண்பு பேசப்படுகிறது. அது குறிப்பாகத் தமிழர்களின் வாழ்க்கை மேன்மையைக் காட்டுகிறது. இல்லறத் தலைவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான். தலைவி தற்காத்துத் தற்கொண்டான்பேணி  தகைசான்ற சொற்காத்து இல்லறம் நடத்துகிறாள். மனைக்கு விளக்கம் மடவாள் அந்த மடவாளுக்கு விளக்கம் தகைசால் புதல்வர். புதல்வரைத் தம்மினும் அறிவுடையவராக வளர்க்கின்றனர். இல்லத்தில் அன்பு நிறைந்திருக்கிறது. விருந்தினரை உண்பித்துப் பின் தாம் உண்டு மகிழ்கின்றனர்.
இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்றல், பணிவான பேச்சு, நன்றியறிதல், தன்னடக்கம், பொறாமையின்மை, பயனில பேசாமை, தீயன செய்ய மனம் கூசுதல், உலக நடைமுறையறிந்து செயல்படல், தக்கார்க்கு ஈதல், அதன்வழித் தகுதியான புகழ் பெறல், இவை இல்லறத்தாரின் பண்புகளாக அமைகின்றன. இவை வள்ளுவர் கூறும் இல்லறம்.
மயிலாப்பூரில் வள்ளுவர் வாசுகியுடன் மேற்கண்ட பண்புகளமைந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். அதையே அனைவரும் மேற்கொண்டொழுகத் தம் பாடல்கள் மூலம் கூறி வைத்தார்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”
“ஈதலே நன்று”
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
என்ற குறட்பாக்கள் சமுதாயத்தில் மக்கள் கூடி வாழத் தேவையான அறத்தைக் கூறுகின்றன. இந்தப் பண்பாடான நெறிமுறையை நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு சமுதாயத்தில்தான் காண முடியும் என்று மேனாட்டாரும் பாராட்டுகின்றனர்.
இருள்சேர் இருவினை என்பதற்கு வேதாத்திரி அவர்கள் பிறக்கும் வரை கொண்டுவந்த முன் பிறவி வினை (சஞ்சித கர்மா) என்றும் பிறந்த பின் நாம் செய்து முடித்த வினை (பிராப்த கர்மா) என்றும் விளக்கம் கூறுகிறார். இறை நம்பிக்கை கொண்டு ஆசைப்படாமல் வாழ்பவரை இருவினைகள் சேரா.
தேவைக்குப் பயன்படுத்துவது உரிமை.
தேவைக்குமேல் பயன்படுத்துவது திருட்டு.
இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. மேகம் மழையை வழங்குவது போல நாம் நம் சமுதாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இந்திரிய சுகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் இந்திரர்கள். இந்திரிய சுகத்தில் இருப்பவர்கள் தவம் செய்யமாட்டார்கள். ஒரு நொடிப்பொழுது ஒழுக்கம் தவறினும் கீழ்நிலைக்குப் போய்விடுவர்.
அறம் என்பது ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும் இணைந்த வாழ்க்கை நெறி. ஒழுக்கம் என்பது தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ மனதிற்கோ நன்மை தரக்கூடிய எண்ணம், சொல், செயல் என மாத்துறவி கூறுவார்.
இன்னொருவரை எதிர்பார்த்து வாழ்வது மனிதனுடய வாழ்க்கை முறை அன்று. தானும் உழைத்துண்டு வாழ வேண்டும். தன் உழைப்பினால் பெற்ற பொருளால் மற்றவருக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த இயற்கை நீதியை உணர்ந்துகொள்ள வேண்டும்.
காலம் காலமாகப் பெண்களுக்கே புத்தி சொல்லிப் பழகிவிட்டோம். ஆண்களை அவதாரங்களாக்கி விட்டோம்.
கணவனுடைய ஆற்றலையும் சிறப்பையும் வருமானத்தையும் உணர்ந்து வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ளும் பண்பைப் பெற்ற குடும்பம் ஒரு அறிவுத் திருக்கோவில்.
கற்புடைய பெண் மழை பெய் என்றால் பெய்யும் என்பது தவறு. பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள் என்று பொருள்.
மனைவி கணவனை வணங்குவது பெண்ணடிமைத்தனம் இல்லையா? எதிர்பார்ப்பு இல்லாமல் பெய்வது மழை. அதுபோல எதிர்பார்ப்பு எதுவுமின்றி இல்லறம் பேணுபவள் மனைவி என்பதாம்.
“பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே
அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு”
“புத்தமதக் கோட்பாடே அன்புதான்”.
எழு பிறப்பு என்பதைத் தொடர்ந்து வரும் ஏழு தலைமுறைக்கும் எனப் பொருள்கொள்ள வேண்டும்.
தனக்காகவும் குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாது பிறருக்காகவும் வாழ்வது விருந்தோம்பல்.
முரண்பட்ட வார்த்தைகள் தேவையில்லை என்பதினால் எல்லா மொழிகளிலும் தவறான வார்த்தைகள் மிகக்குறைவாகவே உள்ளன.
மரங்களில் தான் பழங்கள் கிடைக்கின்றன. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான மரங்களை வணங்க வேண்டும், வழிபட வேண்டும் என்ற உணர்வு வந்த போது அங்கு இறையுணர்வு தோன்றியது. இறையுணர்வுக்கு அடிப்படை நன்றியுணர்வு.
பயன் எதிர்பாராமல் உதவுவதற்குப் பெற்றோர் குழந்தையை வளர்ப்பதையும் பயனறிவார் என்பதற்குப் பிள்ளைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதையும் பொருளாகக் கூறுவார் மாத்துறவி.
தனக்கு நன்மை செய்தவர்க்கும் நன்றி பாராட்டி நடுவுநிலை தவறக் கூடாது என்பதற்காக அதிகார முறை வைப்பு அமைக்கப்பட்டது.
தகுதி என்பது வெளியில் இருந்து நமக்குள் வருவது.
தன்மை என்பது நமக்குள்ளே அடக்கம் பெற்ற ஆற்றல். தன்மை, தகுதி இரண்டும் இணைந்தால் அது திறமையாக மலரும். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதே நடுவுநிலைமை. அப்பண்புடையோரே சான்றோர்.
வள்ளுவர் உடைமை என்று 10 அதிகாரங்கள் தந்துள்ளார். அவற்றுள் அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அருள் உடைமை என்னும் ஐந்தும் அறத்துப்பாலில் வருவன.
அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாணுடைமை என்பன ஐந்தும் பொருட்பாலில் வருவன.
சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்குவது யார்க்கும் அரிது. விருப்பு வெறுப்பு அற்ற மனப்பக்குவம் பெற்றவர்க்கே மன அடக்கம் வாய்க்கும். அதிகார வரிசை முறையும் இதனால் விளங்கும்.
மனிதன் வாழ்நாள் முழுதும் பெற்ற தரத்தை ஒருவார்த்தையில் இறக்கிக் கெடுக்கக் கூடியது நாக்கு.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையே இன்பம். ஒழுக்கத்தைக் கற்பித்துக்கொண்டே ஒழுக்கத்தை மீறுகின்ற ஒரே உயிரி மனிதன் மட்டுமே.
உணர்ந்து ஒழுகுகிறவர்கள் மகான்கள்.
ஓதியதைக் கேட்டு உணர்ந்து கொள்பவர்கள் சீடர்கள்.
பொறாமை இருந்தால் ஒழுக்கம் இல்லை.
ஒழுக்கம் இருந்தால் பொறாமை இல்லை.
பிறன் இல் விழைவானை ‘பேதையர்’ என்றும் ‘விளீந்தார்’ என்றும் கூறுகிறார். பிறன் மனை நோக்காமை அறம் மற்றும் ஒழுக்கம்.
இறைத்தன்மைக்கு எல்லையில்லாதது போல பொறுமைக்கும் கருணைக்கும் அன்புக்கும் எல்லை கிடையாது.
பொறாமை மனிதனின் உடலுக்கும் மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் ஆன்மாவுக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடிய தீய அலை.
இரட்டைக் குழந்தைகளுக்கிடையே கூட வேறுபாடு உண்டு. வேறுபாட்டை உணர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை.
ஒருவருடைய குறைகளைப் பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது புறம்பேசுவதாகும். பொய்யாக இருக்கும் பட்சத்தில் அது அவதூறு ஆகும்.
நம்முடைய  அனுபவங்களால் மற்றவர்களுக்குப் பாடம் கிடைக்க வேண்டும். மற்றவருடைய அனுபவங்களால் நமக்குப் பாடம் கிடைக்க வேண்டும். வாழ்க்கையில் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
ஒரு அறிவாளியின் வாய் அவன் மனதில் இருக்கிறது. ஒரு முட்டாளின்  மனம் அவன் வாயில் இருக்கிறது.
நன்மையைப் பிறர்க்களித்து நட்டத்தைத் தான் ஏற்போர் ஈசன் நிலை உணர்ந்தோர் என்பார் மாத்துறவி. சிவ பெருமான் அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்து நஞ்சைத் தானுண்டதை இங்கு நினைவுகூர்வோம்.
புகழ் என்பது நன்மையைப் பாராட்டுகிற நன்றியுணர்வு. மக்களுக்கு நன்மை செய்தவர்கள் தான் உடலால் அழிந்தாலும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். அதைத் தலைமுறைக்கும் எடுத்துரைப்பவர்கள் ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள்.
“அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”
மனித வாழ்க்கையில் இரண்டு பக்கம் இருக்கிறது. உரூபாய் நோட்டில் இரண்டு பக்கமும் அச்சாகி இருந்தால் தான் அது செல்லுபடியாகும். வாழ்க்கையில் ஒருபக்கம் பொருள், மறுபக்கம் அருள். பொருளும் அருளும் இணைந்ததே வாழ்க்கை. பொருள் மட்டும் இருந்தால் அது செல்லாக் காசு.
புலால் உண்ணாமை உள்ளது உயிர்நிலை. இறைவனுக்கு ஆடு, கோழி வெட்டினால் நல்லது நடக்கும் என்று எண்ணுகிறார்கள். இது அறியாமை என்கிறார் வள்ளுவர்.
மனதைப் பக்குவப் படுத்துகிற பயிற்சி தவம். சாதாரண மனநிலைக்கும் தவத்தின் மூலமாக அடைகிற மனநிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இறை நெறியை உணர்கின்றபோது எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தைப் பெறுகிறோம்.
யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்; துன்பப்படும் உயிர்கட்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என வாழ்வது தவம்.
துறவு வாழ்க்கை மேற்கொள்கிறேன் என்று சொல்லி குடும்பம், புலன் இன்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்பவர்கள் மனதில் ஏற்படக்கூடிய போராட்டங்களைக் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் சுட்டுகிறது.
உள்ளத் தூய்மையே முதன்மையானது. புறத்தோற்றம் அன்று. யாழ் வளைந்திருப்பினும் இன்னிசை தருவது. அம்பு நேராக இருப்பினும் காயப்படுத்துவது. உலகம் பழித்ததை ஒழித்துவிடு. அதுவே மேலான தவம்; மேலான அறம் என்கிறார்; வள்ளுவர்.
தெய்வ நெறியை மதித்து வாழ்கிற வாழ்க்கைக்கு அறம் என்று பெயர். ஆன்மிகத்திற்கு இல்லறம் எதிரானது அன்று.
பல துறவிகள் மனைவிகளோடு வாழ்ந்ததைப் புராணங்களில் படித்திருக்கிறோம். இந்த மேலான வாழ்க்கை இலக்கணத்தைக் கொடுத்த வள்ளுவரும் தம் மனைவி வாசுகியோடு வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.
பொய், களவு, சூது, கொலை, கற்பு நெறி தவறுதல் இவ்வைந்தும் மிகப்பெரிய பாவங்கள். பொய் மனதில் தோன்றும் குற்றம். உண்மை என்பது உள்ளத்தில் பிறப்பது. அது வாய் வழியாக வரும் போது வாய்மையாகிறது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. நல்ல உள்ளம் என்பது மனச்சான்று.
வள்ளுவர் தன்னுடைய வாழ்க்கையையே சான்றாக வைக்கிறார். ‘வாய்மையைவிட நல்ல பிற ஒன்றை யான் கண்டதில்லை’ என்கிறார்.
வெகுளி என்பது எரிபொருள் போன்றது. அது மனமகிழ்சியைக் கொல்லும்; நகையும் உவகையும் கொல்லும்; சினம் நமக்குக் காலனாக மாறும். இனத்தையும் அழிக்கும்.
தான் செய்யும் நல்வினை தீவினைப் பயன்கள் தனக்கோ தன் சந்ததிக்கோ திரும்ப வந்தே தீரும்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’
‘முற்பகல் செயின் பிற்பகல் விளையும்’
புலால் மறுத்தல், கொல்லாமை இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லவில்லை. புலால் மறுத்தல் சமைத்துக் கொடுத்ததை உண்ண மறுப்பது. கொல்லாமை என்பது உயிர்க் கொலை செய்யாமல் இருப்பது. மாத்துறவி இவையிரண்டையும் ‘உணவுக்கு உயிர் கொல்லாமை’ என்கிறார். ‘அறவினை யாதெனில் கொல்லாமை’ என்கிறார் வள்ளுவர்.
செல்வம், உடல், இளமை இவை நிலையா. எனவே இதை உணர்ந்து இளமையிலேயே அறம் செய்ய வேண்டும். உயிரைப் பாதுகாக்க ஏற்ற பெட்டகம் அறம்.
உண்ணா நோன்பு உடலைத் தூய்மை செய்யும்.
மௌன நோன்பு மனதைத் தூய்மை செய்யும்.
அளவு முறையோடு வாழ்க்கை வளங்களைப் பயன்படுதினால் எந்தவிதத் துன்பங்களும் வருவதில்லை என்ற இயற்கை நெறியை மையமாக வைத்து அந்தப் பக்குவத்தைத் தரக்கூடிய பயிற்சி முறைகளைத் துறவு என்று வகுத்தார்கள்.
வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள்,
   “வேண்டியன அறிவோய் நீ
    வேண்டிய தெல்லாம் தருவோய் நீ” என்கிறார்.
நம் உடம்பில் தெய்வத்தைக் காண முடியாதவன் வேறெங்கும் காண முடியாது.
புத்தர், ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார். அவருக்குப் பின் வந்த வள்ளுவர் ‘அவா அறுத்தல்’ என்கிறார்.
அறத்துப்பால் கடவுள் வாழ்த்தில் தொடங்கி ஊழ் அதிகாரத்தில் முடிகிறது. வள்ளுவப் பெருந்தகை அறத்தைப் பற்றிய முழு விளக்கத்தைக் கொடுத்து அறவழியில் நின்று பொருளீட்ட வேண்டும் என்பதை அடுத்து வரும் பொருட்பாலில் விளக்குகிறார்.
திருக்குறளுக்குப் பின் வந்த அறநூல்கள் வள்ளுவத்தை விளக்குவனவாக அமைந்தனவே அன்றி விஞ்சுவனவாக எதுவும் அமையவில்லை. உலகிலேயே எந்த மொழியிலும் திருக்குறளை விஞ்சிய ஓர் அறநூல் இல்லை.
திருக்குறள் அறத்தினை உணரத் தலைப்படுவார்க்கு ஓர் அறநூல். வாழ்க்கை நெறியறிய விரும்புவோர்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டு நூல். அந்நூலைப் பயில்வார் பெருஞ்சிறப்புப் பெறுவார். எனவே வள்ளுவம் கற்போம்; வாழ்க்கை அறிவோம் !

ஆக்கம்    :      செ.கணேசன் எம்.ஏ., எம்.எட்.,
ஆலோசகர்,
(முன்னாள் தமிழ்மொழிக் கல்வி விரிவுரையாளர்)
கதிர் கல்வியியல் கல்லூரி,
எஸ்.எப். எண் : 806,
அவினாசி சாலை,
நீலம்பூர், கோயம்புத்தூர் – 641062
கைப்பேசி : 9842225244