தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 22 September 2016

பி.எட்., படிப்பில் சரியும் மாணவர் சேர்க்கை!

கோவை மாவட்டத்தில், பி.எட்., பட்டம் பெற்று, 8,764 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் தெரியவந்துள்ளது.

தொடரும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு,டெட் தேர்வுகல்வி காலம் உயர்வு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை நடப்பு கல்வியாண்டிலும் சரிந்துள்ளது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ்,தமிழகம் முழுவதும், 726 பி.எட்.கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும்ஒரு லட்சம் பேர் பி.எட்.,பட்டம் பெற்று வெளிவருகின்றனர். 2003ம் ஆண்டுகளுக்கு முன்தமிழகத்தில் பி.எட்.,கல்லுாரிகளின் எண்ணிக்கை குறைவு இதனால்பட்டம் பெற்றவர்களுக்குவேலைவாய்ப்பு எளிமையாக இருந்தது.
ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பின்தமிழகத்தில் தனியார் பி.எட்.கல்லூரிகள் தொடங்க தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் அனுமதி அளித்தது. தொடர்ந்துபுற்றீசல் போல் பல்வேறு தனியார் பி.எட்.கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலும் நீண்டு வருகிறது.
இந்நிலையில்அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவால் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு,கட்டாய டெட் தகுதித் தேர்வுவேலைவாய்ப்பின்மைஇரண்டாண்டு கல்விக்காலம் உயர்வு போன்ற காரணங்களால்பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக சரிந்தது.
நடப்பு கல்வியாண்டில், 60 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்றி மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளது.
கல்வியாளர் பிரபாகரன் கூறுகையில்நடப்பு கல்வியாண்டில்அரசு பி.எட்.கல்லுாரிகளில் மட்டுமே இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மாணவர்கள் சேர்க்கை இன்மையால் தனியார் கல்லுாரிகள் மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்தஜூலை நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மட்டும், 8,764 பேர் பி.எட்.முடித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தமிழகத்தில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 991 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறதுஎன்றார்.

Tuesday 20 September 2016

உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?

ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.


திடீரென்று கடுமையான  மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.

எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு  சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.

 அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
         
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.

பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
     
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.

அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு  "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு  வணக்கம் சொல்வாயா ?" என்றார்.

அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
     
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம்  சொல்வாயா?" என்றார் .
       
காசைத் தொடாமல் அவன்  சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
       
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல  சரி பாதியைக்  கொடுத்துட்டேன்.  இப்பவாவது வணக்கம் சொல்வியா?"

மெல்லிய புன்னகையுடன்  அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும்  இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .
     
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்  ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு.  இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜா வாயடைத்துப் போனார் .

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை.  உண்மையான  அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.

Tuesday 17 May 2016

எதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்

          பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து, உயர்கல்விக்கு செல்லும் காலகட்டத்தில், பல மாணவர்கள், அதற்கான ஏற்பாடுகளில், மும்முரமாக இருக்கும் காலகட்டம் இது.
       இந்தியாவில், குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் பொறியியல் படிப்பா? பலராலும் பெரிதாக நினைத்து விரும்பப்படும் மருத்துவமா? கலை, அறிவியல் படிப்பா? தொழில்நுட்ப படிப்பா? மேலாண்மை படிப்பா? அல்லது டிப்ளமோவா என்பன போன்ற பலவித குழப்பங்களில் மாணவர்கள் சிக்கித் தவிப்பர்.
         இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெரிய கொடுமை என்னவென்றால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கூட, தாங்கள் விரும்பிய படிப்பை படித்து, விரும்பிய துறையில் பணிபுரியும் ஒரு நல்வாய்ப்பு வாய்ப்பதில்லை.
சமூக அந்தஸ்து, நல்ல வேலை வாய்ப்பு, சிறப்பான சம்பளம், பெற்றோரின் விருப்பம், மூன்றாம் நபரின் தலையீடு, போதுமான விழிப்புணர்வு இல்லாமை, நாட்டின் சூழல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், பலரும், தங்களுக்கு விருப்பமில்லாத படிப்பிலேயே சேர்ந்து படிக்கின்றனர். பாதிபேர், படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைப் பெறும் நிலையில், இன்னும் பாதிபேர், படிப்புக்கு தொடர்பேயில்லாத பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
அதாவது, விருப்பமில்லாத ஒரு படிப்பில் சேர்ந்து, அதை படித்து முடித்து, கடைசியில், அந்த படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைக்கூட பெற முடியாமல், வேறு ஏதோவொரு பணி வாய்ப்பை பெற்று, தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இதை கொடுமையிலும் கொடுமை என்று கூறலாம்.
40 மற்றும் 50 வயதைக் கடந்த பலர், தாங்கள் செய்யும் பணிகளில் திருப்தியில்லாமல்,
          "ஏதோ, வேறு வழியில்லை, இப்படியே என் காலத்தை ஓட்டிவிட்டேன்; என்ன செய்வது, வருமானத்திற்காக ஏதோ ஒரு வேலையைப் பார்த்துதானே ஆக வேண்டியுள்ளது. என் பள்ளி மற்றும் கல்லுரி நாட்களில், நான் சிறந்த விளையாட்டு வீரன்/வீராங்கனை. ஆனால், என் தந்தைக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தி, ------- பட்டப் படிப்பை படிக்க வைத்தார். கடைசியில், அந்தப் படிப்பிற்குகூட சம்பந்தமில்லாத வேலையைத்தான் நான் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, குப்பைக்கொட்டி வருகிறேன்; இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. விரும்பிய பணியையும் மேற்கொள்ள முடியவில்லை"
என்பன போன்று, பல ரகமாக புலம்புவதை பலர் கேட்டிருக்கலாம்.
இதில், நமக்கான எச்சரிக்கை என்னவென்றால், இதுபோன்றதொரு வகையான புலம்பல், நாளை நம்முடையதாகி விடக்கூடாது. எனவே, மாணவர்களே, உங்களுக்கான உயர்கல்வியை மிகவும் கவனமாக தேர்வு செய்யுங்கள்.
           பெற்றோர்கள், நாம் மோசம் போக வேண்டுமென நினைப்பதில்லை. ஏதோ அறியாமை அல்லது சமூக அழுத்தம் அல்லது அவர்களுடைய ஆசை ஆகியவற்றுக்காக நம்மை, உயர்கல்வி விஷயத்தில், நமது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்துகிறார்கள், அவ்வளவே. அவர்களை, நம்மளவிலோ அல்லது வேறு யாரேனும் சரியான நபர்களின் துணைகொண்டோ புரிய வைப்பது நம் கடமை.
           இந்த சமூகத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை எங்குள்ளதோ, அதை நோக்கி இந்த சமூகம் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த சமூகத்தில் நிலவும் சூழலின் பொருட்டு, உங்களுக்கான படிப்பை தயவுசெய்து தேர்வுசெய்ய வேண்டாம்.உங்களின் திறமை, விருப்பம் மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே படிப்பை தேர்வு செய்யவும். உங்களின் துறையில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால், இந்த சமூகம் உங்களைத் தூக்கி கொண்டாடும்.
      இன்று புதிதுபுதிதாக பல துறைகள் முளைத்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த சில துறைகள், இன்று, வேறு வகையில் புத்துணர்வு பெற்று வருகின்றன. தகவல் தொழில்நுட்ப உலகில், நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். 20 ஆண்டுகளுக்கு அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை.
         எனவே, உங்களுக்கான படிப்பை தேர்வு செய்யும்போது, இதைவைத்து நாம் பிழைக்க முடியுமா, கரை சேர முடியுமா? என்று வெறுமனே யோசிக்காமல், இத்துறையில் நுழைந்தால், நாம் எப்படியெல்லாம் நம் திறனை வளர்த்துக்கொண்டு, நம்மை சிறப்பான முறையில் வெளிப்படுத்திக்கொண்டு, புகழையும், பணத்தையும் சம்பாதிக்கலாம், இந்த சமூகத்திற்கு எதையாவது நல்லது செய்யலாம் என்பதைப் பற்றி மட்டுமே யோசியுங்கள்.
      உங்கள் லட்சியத்தை, சரியான முறையில் திட்டமிட்டு, அதற்கேற்ப, விடாமுயற்சியுடன் உழைத்து, அதை அடைந்துவிட்டால், அப்புறம் பாருங்கள், இந்த சமூகம், உங்களை நோக்கி திரும்பி பார்க்கும்.

கல்லூரியில் படிப்பதென்பது...

              பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே.
        ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள்.
இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை - அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்னபிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோநிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.
          பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவேத் தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.
           பாடப்புத்தகத்தை தவிர, வேறு எதற்கும் இடமில்லை. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி, உயர்கல்வியில், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதப்படும் நிலை உள்ளது.
           சரி, அவை அப்படியே இருக்கட்டும். தற்போது, நாம் ஏதோ ஒரு உயர்கல்வி படிப்பில் சேர்ந்துவிட்டோம். அது எதுவாகவோ இருக்கட்டும். அந்தப் படிப்பை எப்படி படித்தால், அதாவது, நமது கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்வை எவ்வாறு செலவிட்டால், நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.
            சமீப ஆண்டுகளில், நாம் ஒரு செய்தியை(பொதுவாக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை படிப்புகளை படித்தவர்களுக்கானது) அடிக்கடி கேட்டிருப்போம்."பல பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தேசிய, உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான அளவில், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன" என்பன போன்ற செய்திகள்தான் அவை.
             ஒவ்வொரு ஆண்டும், படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க, தகுதியான பணியாளர் பற்றாக்குறையோ, கூடிக்கொண்டே செல்கிறது. நாம், தகுதியான கல்லூரியில் படிக்கிறோமா என்பது இருக்கட்டும். ஆனால், ஒரு சுமாரான கல்லூரியில் படித்தாலும்கூட, ஒரு மாணவர், தனது படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.
                  பள்ளிப் படிப்பு வரையில், நாம் படித்த விதமே வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒருவர், வெற்றிகரமான மாணவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.
             ஆனால், கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அப்படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, நாம் எந்தளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான், படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில்துறைதான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும்போதே தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது ஜொலிக்கலாம்.
            எனவே, கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்கி, வாழ்விற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
     ஏனெனில், கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒரு மாணவர், பணிசெய்தல் என்ற மிகப்பெரிய ஒரு பொறுப்பிற்குள் செல்கிறார். அங்கே அவர் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில்தான் அடங்கியுள்ளது.

கல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...

        பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களே, கல்லூரிப் படிப்பு எப்படியானது என்பதை நீங்கள், சீனியர்களின் மூலமாக ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரி வாழ்க்கை அதிகளவில் வித்தியாசப்படக்கூடிய ஒன்று. அதிக சுதந்திரமாக உணர்வோம் மற்றும் வாழ்க்கையில் நாமும் பெரிய ஆளாக ஆகிவிட்டோம் என்று உணர்வதோடு, ஒரு புதிய மனோபலத்தையும் பெறுகின்ற பருவமே இந்தக் கல்லூரி பருவம்.
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பில் இல்லாத சில சவுகரியங்கள் உண்டு.
முழு ஆண்டுத்தேர்வு என்ற நெருக்கடி இல்லாமை, செமஸ்டர் சிஸ்டம், ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின்மை, விடுமுறை எடுப்பதில் சற்று சுதந்திரம், சீருடை இல்லாமை, ஒரு ஆண்டுக்கான பாடங்களில் முழுமையாக தேர்ச்சி அடையாவிட்டாலும், அடுத்த ஆண்டு படிப்பிற்கு செல்லும் நடைமுறை, ஒரு செமஸ்டரில் சற்று மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த செமஸ்டரில் அதிக மதிப்பெண்கள் பெற்று அதை ஈடுசெய்துகொள்ளும் வசதி மற்றும் பள்ளிப் படிப்பைவிட அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்லூரிப் படிப்பின் முக்கியமான சவுகரியங்கள்.
மேற்குறிப்பிட்ட பல சலுகைகளை, ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள், தவறாக பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக அல்லது கல்லூரிக்குள் நுழைந்ததும் அப்பழக்கத்திற்கு ஆட்படுபவர்களாக இருக்கிறார்கள்.
அவை என்னென்ன?
அரியர் வைத்தல்
ஒரு செமஸ்டரில் சில பாடங்களில் தவறினாலும்(fail), அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், அடுத்த செமஸ்டரை எழுதும்போது, நாம் கூடுதல் சுமையுடன் எழுத நேரிடுகிறது.
இதனால், கடந்த செமஸ்டர் பாடங்களையும் படிக்க வேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், இந்த செமஸ்டர் பாடங்களில், போதியளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து அசட்டையாக இருக்கும் மாணவர்கள், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் சில பாடங்களில் தோல்வியடைகிறார்கள்
எனவே, அவர்களின் அரியர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போய், முடிவில், அவர்கள் கல்லூரி இறுதியாண்டு வரும்போது, குறைந்தபட்சம் 10 முதல் 15 அரியர்கள் வரை வைத்திருப்பார்கள். விளைவு, அவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்படுகிறது.
இத்தகைய மாணவர்கள், அதன்பிறகான ஆண்டுகளிலும், சோம்பேறித்தனம் மற்றும் இன்னபிற வாழ்க்கைச் சூழல்களால், தங்களின் பட்டப் படிப்பை கடைசிவரை நிறைவுசெய்ய முடியாமலேயே போய்விடுகிறது. அவர்களின் கல்வித்தகுதி வெறும் பிளஸ் 2 என்பதாகவே இருக்கும்.
விடுமுறை எடுத்தல்
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதியாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட அளவு வரை விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரியிலேயே அதற்கான அபராதத்தைக் கட்டி, ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளும் விதிமுறை இருக்கும். அந்தக் குறிப்பிட்ட அளவையும் தாண்டுகையில், அந்த கல்லூரிக்கான சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று, ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும்.
ஆனால், மேற்கண்ட இரண்டு வரைமுறைகளையும் தாண்டி, அதிகமான விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் எழுதும் வாய்ப்பையே இழக்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கையில் நுழைந்ததும், சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதுபோல் உணர்வு ஏற்படும். எனவே, இஷ்டத்திற்கு கட் அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது தன் வாலிப பருவத்தின் அடையாளமாகவோ கருதுவார்கள்.
எனவே, அளவோடு, நாம் எந்தளவிற்கு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நன்கறிந்து, அதற்கேற்ப, உங்களின் படிப்பு பாதிக்காத வகையில், விடுப்பு எடுத்து, கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவும்.
எதிர் பாலினம்
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரியில், (அது இருபாலர் பயிலும் கல்லூரியாக இருக்கும்பட்சத்தில்), எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அத்தகைய வாய்ப்பை படிப்பு விஷயத்திற்கோ அல்லது அறிவை பெருக்கிக் கொள்வதற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான வாய்ப்புகளை பெறுவதற்கோ மட்டுமே பயன்படுத்திக் கொண்டால், இருபாலருக்குமே மிகவும் நன்று.
அதைவிடுத்து, இந்த வயதில் இதை செய்யாமல் எப்போது செய்வது என்று சினிமா தாக்கத்தில் சிந்தித்து, அதுவே வாழ்க்கை என நினைத்து, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.
இதர பழக்கங்கள்
கல்லூரி வாழ்க்கையில், மது, சிகரெட் மற்றும் பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். அவர்கள் உடன்படிக்கும் மாணவர்களாகவோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருக்கும் மாணவர்களாகவோ இருப்பார்கள்.
நம்மையும், அதையெல்லாம் பழகிக்கொள்ள சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால்தான் அவன் ஆண்பிள்ளை மற்றும் முழு மனிதன் என்பன போன்ற சிறந்த தத்துவங்களையெல்லாம் உதிர்ப்பார்கள். அதுபோன்ற தத்துவங்களை காதுகொடுத்து கேட்பது மட்டுமல்ல, ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள்.
அத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு, உங்களின் உடல்நலன், மனநலன், நன்மதிப்பு மற்றும் படிப்பு ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் முழுமனிதனாக இருக்க முடிவதோடு, உங்களின் வாழ்வையும், சரியான முறையில் அனுபவிக்க முடியும்.
வாழ்வின் சொர்க்கம்
கல்லூரி வாழ்க்கையை, ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை என்றே கூறலாம். ஆனால், அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே, நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
ஈடன் தோட்டம் எனும் சொர்க்கத்தில் ஆனந்தமாய் திரிந்த ஆதாமும், ஏவாளும், சாத்தானின் பேச்சைக் கேட்டு, தின்னக்கூடாத ஞானப்பழத்தை தின்று தங்களுடைய வாழ்வை வீணடித்து, தேவையற்ற சாபத்தை பெற்றார்கள் என்பது பைபிளில் வரும் ஒரு கதை.
உங்களின் கல்லூரி வாழ்க்கை எனும் சொர்க்கத்திலும், பல சாத்தான்கள், உங்களை தவறுசெய்ய தூண்டுவார்கள். எனவே, அவைகளின் பேச்சைக்கேட்டு, உங்களின் ஆனந்தத்தை இழப்பதோடு, எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள் மாணவர்களே!

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி!


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகளவாக, 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில் 4,19,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.9 சதவீதம். தேர்வு எழுதிய மாணவர்களில் 3,41,931 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரே பள்ளியில் இரண்டு ‘ரேங்க்’: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆர்த்தி 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 199, ஆங்கிலத்தில் 197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்


சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

ஆர்த்தி  மற்றும் ஜஸ்வந்தும் - 1195 மதிப்பெண் முதல் இடம்.

பவித்ரா, - 1194 மதிப்பெண்  இரண்டாம் இடம் மற்றும் 

வேணு பிரீத்தா - 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.

பிரஞ்சு பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

சத்ரியா  கவின், முதல் இடம் - 1195 மதிப்பெண்
 
ஸ்ருதி , இரண்டாம் இடம் - 1194  மதிப்பெண்

சமிரித்தா, மூன்றாம் இடம் - 1193 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

சமஸ்கிருதம் பாடத்தில் நவீன் மற்றும் நீவேத்திதா - 1193 மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

கணிதத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும்  200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள்:

சென்னை : 91.81 சதவீதம்
வேலூர் : 83.13 சதவீதம்
காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்
திருவள்ளூர் : 87.44 சதவீதம்
திருவண்ணாமலை : 90.67 சதவீதம்
கரூர் : 93.52 சதவீதம்
அரியலூர் : 90.53 சதவீதம்
பெரம்பலூர் : 96.73 சதவீதம்
திருச்சி : 94.65 சதவீதம்
நாகை : 86.80 சதவீதம்
திருவாரூர் : 84.18 சதவீதம்
தஞ்சாவூர் : 90.14 சதவீதம்
விழுப்புரம் : 89.47 சதவீதம்
கடலூர் : 84.63 சதவீதம்
சிவகங்கை : 95.07 சதவீதம்
விருதுநகர் : 95.73 சதவீதம்
தேனி : 95.11 சதவீதம்
மதுரை : 93.19 சதவீதம்
திண்டுக்கல் : 90.48 சதவீதம்
ஊட்டி : 91.29 சதவீதம்
திருப்பூர் : 95.2 சதவீதம்
கோவை : 94.15 சதவீதம்
ஈரோடு : 96.92 சதவீதம்
சேலம் : 90.90 சதவீதம்
நாமக்கல் : 94.37 சதவீதம்
கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்
தர்மபுரி : 90.42 சதவீதம்
புதுக்கோட்டை : 93.01 சதவீதம்
கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
திருநெல்வேலி : 94.76 சதவீதம்
தூத்துக்குடி : 95.47 சதவீதம்
ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
புதுவை: 87.74 சதவீதம்

பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி ஆர்த்தி, ஜஸ்வந்த் முதலிடம்.


ஆர்த்தி (இடது), ஜஸ்வந்த் (வலது)

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்யா மந்திர் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேர் 1195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அம்மன் நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகள் ஆர்த்தி 1195 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் இடம் பிடித்துள்ளார்.இரண்டாம் இடத்தை திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியின் மாணவி பவித்ரா பிடித்துள்ளார். அவர்பெற்ற மதிப்பெண் 1194.மூன்றாம் இடத்தை நாமக்கல் கண்டம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவி வேணுப்ரீதா பிடித்துள்ளார். அவர் 1200-க்கு 1193 மதிப்பெண் பெற்றுள்ளார்.

முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண் - பாடவாரியாக

தமிழ்199
ஆங்கிலம்197
இயற்பியல்199
கணிதம்200
வேதியியல்200
உயிரியல்200
மொத்தம் 1195

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%. வழக்கம்போல் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.4% மாணவிகள்; 87.9% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள், ரேங்க் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டார்.

Thursday 12 May 2016

நல்ல வேலை தரும் நாட்டிக்கல் சயின்ஸ


           விமானங்கள் வரும் முன், கண்டம் விட்டு கண்டம் பயணம் செல்ல வேண்டுமென்றால் கடல் வழியாகத் தான் செல்ல முடியும். 
அன்று கப்பல்கள் மட்டுமே அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது. விமானங்கள் வந்த பிறகும் கப்பல்களின் முக்கியத்துவம் குறையவில்லை. பெருமளவில், கடல் மார்க்கமாகவே இன்று சரக்குகளின் ஏற்றுமதி, இறக்குமதி நடக்கிறது.
இத்துறையில் வேலைவாய்ப்புகளும் குவிந்துள்ளன. பணியாற்ற விரும்புவோர், நாட்டிக்கல் சயின்ஸ் படித்திருக்க வேண்டியது அவசியம். கடலில் பயணிப்பது, கப்பல்களை பராமரிப்பது, சரக்குகளை ஏற்றி, இறக்குவது, பயணிகள் மற்றும் பணிபுரிவோரின் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றி கற்றுத் தரப்படுகிறது. கடல் பயணங்களின் போது தேசிய, சர்வதேச வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அது பற்றியும் கற்றுத் தரப்படுகிறது. காம்பஸ்கள், ரேடார் உபகரணங்களை பயன்படுத்தவும், சர்வதேச கடல் வழிச் சட்டங்கள் குறித்தும், இதை சார்ந்த பொறியியல், சுற்றுச்சூழல் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.
யார் படிக்கலாம்
இப்படிப்பில் சேர, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் 60 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நாட்டிக்கல் சயின்சை பொறுத்தவரை, இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று மதுரையில் அமைந்துள்ள ஆர். எல். இன்ஸ்டிட்யூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ். இது ஐ. எஸ். ஓ., தரச் சான்றிதழ் பெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற கிரிசில் என்ற தரப் பரிசோதனை அமைப்பிடமிருந்து வெரி குட் சான்றிதழ் பெற்றது. 
இங்கு பி.எஸ்., மரைன் இன்ஜினியரிங், பி.எஸ்., நாட்டிக்கல் சயின்ஸ் கற்றுத் தரப்படுகிறது. படிப்பை முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு படித்தவர்கள் முன்னணியில் உள்ள 22 கப்பல் நிறுவனங்களில், பணிபுரிந்து வருகின்றனர். விபரங்களுக்கு: www.rlinstitutes.com இணையதளத்தை பார்க்கவும்.

உடுமலை கல்வி மாவட்டம்; நூலக மேம்பாடு

அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க பொதுப் பள்ளி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்என, மாற்றுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பினர், உடுமலை வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வரவிருக்கும் அரசு, என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும், இதுவரை ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் கூறிய வாக்குறுதிகளை தெளிவாக கருத்தில்கொண்டும், தங்களுக்கான தேவைகளை கோரிக்கைகளாக முன் வைத்து வருகின்றன பல்வேறு அமைப்புகள். உடுமலை தொகுதியில், நீண்ட காலமாக ஏமாற்றம் நிறைந்த எதிர்பார்ப்பாக இருப்பது மேம்படுத்தப்படாத கல்வி முறை.
இத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியிடமும், இங்குள்ள கல்வியாளர்களும், பெற்றோரும், எதிர்பார்ப்பதும் இதுதான்.
கல்வி மாவட்டம், நுாலகத்துறையில் முன்னேற்றம் என்ற வாக்குறுதிகளை ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் நினைவுப்படுத்தி வந்தாலும் அதற்கான பதில் செயல்திட்டமாக அரசியல் கட்சிகளிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை. இம்முறை இதற்கு தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற வேகத்தோடு, வேட்பாளர்களை சந்தித்து கல்வி மேம்பாட்டு திட்டங்களை கோரிக்கைகளாக முன்வைத்து வருகின்றனர் உடுமலையைச் சேர்ந்த மாற்று கல்விக்கான மாநில மேடை அமைப்பினர்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி கூறியதாவது: கல்விக்கான திட்டங்களை தேர்தல்களின்போது கட்சிகள் கூறினாலும் அவற்றை செயல்படுத்துவதில்லை. இம்முறை கல்வி மேம்பாட்டு திட்டங்களை ஒரு கோரிக்கையாகவே வலியுறுத்தி, வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளோம். பள்ளிகளில் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்றுபாட வேளையாவது நுாலக பாடமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நுாலகங்களை உயிரோட்டமாக செயல்படுத்த வேண்டும்.
மலைவாழ் கிராமத்தில் உள்ள பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிளை இணைத்து உடுமலையை மையமாகக்கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க முழு முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு கல்வி மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை ஒவ்வொரு வேட்பாளராக சந்தித்து முன்வைத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Thursday 21 April 2016

அன்பே கடவுள்

தேநீர் குடிக்கலாம்...
ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு....நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்..

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது..

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது..ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும்..

அவர்கள் பொருட் படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவை கண்டார்கள்.. அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது..
ஆனால் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது..

"அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை" ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம்...என்றார் மேஜர்..

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்..சார், இது ஒரு தேனீர் கடை தான்..உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்.  நாம் பூட்டை உடைக்கலாமே...
என்றார்..

இது ஒரு தர்ம சங்கட நிலை அவருக்கு.. தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா என்று குழம்பினார்...

சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்..

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே ஒரு தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது..

எல்லோரும் தேனீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்து புறப்பட தயாராகினார்கள்..

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..
இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து , புறப்பட்டார்..

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது..

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை,,ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்..

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார்.

எல்லோரும் தேனீர் பிஸ்கெட் உணடு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.. மிகவும் நிறைந்த நெஞ்சுடன் கடவுள் பக்தியும் இருந்தது..

என் மதிப்பிற்குரிய நண்பர் திரு..சாருஹாசன் போன்ற எண்னம் கொண்ட ஒரு வீரர் கேட்டார்... ஹே தாத்தா... கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்.....என்று...

அப்படி சொல்லாதீர்கள் மகனே..கடவுள் நிச்சயம் இருக்கிறார்..அதற்கு என்னிடம் சான்றே இருக்கு..

மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் எனது மகன் மிகவும் அதிக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டான்...
நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..

என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..

கடவுளிடம் கதறி அழுதேன்.. ஐயா கனவாங்களே , கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்.. நான் அழுது ஆற்றிக் கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது..

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..
கடவுள் இருக்கிறார்..என்றும் இருக்கிறார்.. இதை விட என்ன சொல்ல..
என்று முடித்தார் அவர்..

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது..

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன..
அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந்தார்கள்..

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்..

அந்த முதியவரை தழுவிக்கொண்டு, ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்..கடவுள் இருக்கிறார்... தாத்தா... உங்கள் தேனீர் மிக அபாரம்...
இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஒரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை..

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்..

நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...என்பதே..

இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..மார்க்கம் கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி.

அன்பின் வடிவே தேசமாகட்டும்...

அரைகுறை ஞானம்

பயப்படுவது சரியா ?

சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார்.


எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார்.

ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார்.

அருகே அவரது பாம்புக்கூடை.

சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது.

பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு வயதுக் குழந்தை.

தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது.

இந்தப் பாம்பைப் பார்த்ததும், ‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.

அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார்.

அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை.

பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள்.

‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார்.

பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.

‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’

பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை.

பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை.

இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுவது .

NOTA தகவல்கள்


பொதுமக்கள் மத்தியில் NOTA பற்றி பல நம்பிக்கைகள் நிலவுகின்றன.
அவற்றில் முக்கியமான இரண்டைப் பார்ப்போம்: 1. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட NOTA வாக்குகளின் எண்ணிக்கை அதிகமென்றால், அந்தத் தேர்தலை செல்லாததாக்கி மறுதேர்தல் நடத்துவார்கள். 2. அத்தொகுதியில்
NOTA எண்ணிக்கையை விட குறைவாக ஓட்டு வாங்கியவர்கள் தம் வாழ்நாள் முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுவார்கள்.

இவை இரண்டுமே ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லாத மூட நம்பிக்கைகள்.

உண்மையில் முதலில் மொத்த வாக்குகளில் NOTAவுக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை கழிக்கப்பட்டு விடும். ஏற்கனவே சொன்னது போல் NOTA என்பது ஓட்டு அல்ல; ஓட்டு போடவில்லை என்ற கணக்கு தான். அதனால் அதை ஒதுக்கி விட்டு மற்ற வாக்குகளைக் கொண்டே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். ஒருவேளை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 90% NOTA என்றாலும் மீதமிருக்கும் 10% வாக்குகளில் அதிக வாக்கு பெற்றவர் எவரோ அவரே தேர்தலில் வெற்றி பெற்றவர். இது தான் NOTAவின் இன்றைய நிலை.

தொகுதியில் ஒருவர் மட்டும் தான் நிற்கிறார் என்றால் அவரே போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார். NOTA எத்தனை பதிவாகி இருந்தாலும் பிரச்சனை இல்லை.

இன்னும் சொல்லப் போனால் ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் நிற்க செலுத்திய செக்யூரிட்டி டெபாஸிட் தொகையைப் பெற மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளேனும் பெற வேண்டும், அதைக் கணக்கிடக் கூட தேர்தல் ஆணையம் NOTA-வுக்கு விழுந்த வாக்குகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள வாக்குகளை மட்டும் தான் மொத்த வாக்குகளாய் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

அடுத்து NOTA பற்றிய அவநம்பிக்கையைப் பார்க்கலாம். இத்தனை பலவீனமான, எந்த நேரடிப் பயனும் இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன் என் ஓட்டை வீண் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது.

இப்போதைக்கு NOTA பலகீனமானது தான். ஆனால் ஒன்றுமே இல்லாதது அல்ல.

முதன்மையாக NOTA போடுவதனால் ஏற்படும் இரண்டு உடனடிப் பயன்கள் உண்டு: 1. நீங்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து விட்டீர்கள். 2. வேறு ஒருவர் உங்கள் ஓட்டைப் போடுவதைத் தவிர்த்து விட்டீர்கள்.

இவற்றைத் தவிர்த்து இப்போதே ஒரு மறைமுகப் பயன் இருக்கிறது. அது உங்கள் தொகுதியில் ஒருவர் கூட தகுதியான வேட்பாளர் / கட்சி இல்லை என நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்ற கணக்கு தேர்தல் முடிவு வெளியானதும் தெரிய வரும். அந்த எதிர்ப்பு முகம் முக்கியம் ஆகிறது.

ஒருவேளை கணிசமான எண்ணிக்கையில் ஒரு தொகுதியில் NOTA பதிவாகிறது எனில் (இப்போதைக்கு சுமார் 10% என்றாலே கூட) யாரோ ஒருவர் ஜெயித்தாலும் அது வேட்பாளரை நிறுத்திய அரசியல் கட்சிகளுக்குப் பெரிய அடி தான். அப்படி ஏன் கணிசமானோர் எதிர்த்தனர் என ஆராய முற்படுவர். மக்களிடம் கருத்தறிய முயல்வர். எல்லா கட்சிகளுமே அடுத்த முறை அங்கு வேட்பாளர் நிறுத்துகையில் கவனமாய் இருப்பர். அடுத்து மக்களிடையேயும் இத்தனை பேர் NOTA பதிந்தது தொடர்பாய் விழிப்புணர்வு ஏற்படும். நாமும் தேவைப்பட்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம் எனத் தோன்றும். இது தான் மாற்றத்தின் ஆரம்பப்புள்ளி.

இவை தவிர, எதிர்காலத்தில் சில விளைவுகள் / மாற்றங்கள் சாத்தியமுண்டு.

பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப்பணிந்தது மத்திய அரசு.

        தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.முன்னதாக, பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.


புதிய கட்டுப்பாடுகள்:

  தொழிலாளி ஒருவர் தொடர்ந்து 2 மாதகாலம் தொடர்ந்து பணியில் இல்லையெனில் தனது பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும் பணியில் இருப்பவர்கள் 54வயதை எட்டினால் பிஎஃப் பணத்தைப் பெற முடியும் என்ற விதியும் இருந்தது.இதனை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி பணியில் இருந்து விடுபட்டு விட்டாலும், பிஎஃப் பணத்தை 58 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட 57 வயதுக்குப் பிறகுதான் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு:

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொழிலாளர்கள் தங்கள் சொந்த உழைப்பில் ஈட்டும் பணத்தைத் திரும்பப் பெற அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.இந்த எதிர்ப்பை அடுத்து, புதிய விதிகள் அமலாக்கத்தை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிய விதிகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பெங்களூரில் வன்முறை:

    இந்நிலையில், பிஎஃப் புதிய விதிகளைக் கண்டித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25-க்கும்மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது.பெங்களூரு பொம்மனஹள்ளியில் திங்கள்கிழமை 5 தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்கூரு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகளுக்குத் தீ வைத்தனர். இதில் 6 அரசுப் பேருந்துகளும் ஒரு மாநகரப் பேருந்தும் தீக்கிரையாயின.அதேபோல், ஒசூர் சாலையில் உள்ள ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாயின. இந்த வன்முறையால் பெங்களூருக்கு பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் மாணவி காயம்:

ஹெப்பகோடியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது கல்லூரி மாணவி பிரீத்தி (18) என்பவரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பணிந்தது மத்திய அரசு:

    பெங்களூர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:பிஎஃப் விதிமுறைகள் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளே தொடரும். தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்த அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு (பெங்களூரு வன்முறைக்கு) முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரு தத்தாத்ரேயா, "பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அமல் மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்திவைக்கப்படுகிறது' என்று கூறியிருந்தார்.எனினும், எதிர்ப்பு கடுமையானதை அடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டது.

கூடுதல் சலுகைகள் தரவும் முடிவு

     புதிய விதிகளை திரும்பப் பெறுவதுடன் பிஎஃப் பணத்தில் புதிய சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்கவும் பரிசீலித்து வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி, வீடு வாங்குவது, தீவிரமான உடல்நலக் குறைவு, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை முழுமையாகத் திரும்ப எடுப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சட்டத் துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லவை கற்போம்!

நல்லவை கற்போம் ! - வெ.இறையன்பு


நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும், உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன் அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது. நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது, எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம் புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்விட்டது.


வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர் உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை. இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும் ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும் மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில் மிதப்பதைக் கவனிக்க முடியும். வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்; குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம் என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்.

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.

மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.

நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்.

அமைதி


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி
வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.
“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”
“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,
“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…
அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.
அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

செத்த பாம்பு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.


காரைக்குடி அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை தலைவர் சேகர் கூறியதாவது:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு, நான்கு முறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த பரிசோதனை செலவுகளை குறைக்கும் வகையில், குறைந்த செலவில் மின்னணு கருவிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், 30 லட்ச ரூபாய் செலவில் மேற்கொண்டு வந்தோம்.அதன்படி, குளுக்கோ மீட்டர் உணர் கருவிகள், ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். சர்க்கரை நோயாளிகளுக்கு, ஊசி மூலம் ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.

மூச்சு காற்று மூலமாக சர்க்கரை நோயின் அளவை கண்டறிவதற்கான அடுத்த கட்ட ஆராய்ச்சியில் எங்கள் துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய, குறைந்தபட்சம், 25 முதல் 30 ரூபாய் வரை செலவாகிறது.

Sunday 21 February 2016

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்

             "நீதிக்கதை"

பொறுப்பு

=========
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்

அது ஒரு பழ மரம்

        அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.

மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான்.  மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.


இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.    -----

Monday 11 January 2016

இஸ்ரோவில் வாய்ப்பு

        திருநெல்வேலியில் செயல்படும், இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி..,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்) மற்றும் டெக்னீசியன் (மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்)
வயது வரம்பு: 31.12.2015 தேதி நிலவரப்படி 35க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகையும் உண்டு.
தகுதிகள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ படிப்பு. டெக்னீசியன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ.,  படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29
மேலும் விவரங்களுக்கு: www.iprc.gov.in

அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை

      லண்டன்: மென்சா அமைப்பு நடத்திய காட்டெல்-3பி அறிவுத்திறன் போட்டியில், மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான 162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 
    மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பிரணாப் முகர்ஜி


     ராஞ்சி: நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, 12 தங்க மெடல் வென்ற மாணவர்கள் உட்பட, 761 இளநிலை மாணவர்கள், 604 முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: 
        நாட்டில் கல்விதரம் குறைந்து வருகிறது. கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் இதனைத்தடுத்து, கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் அதிகளவில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது அவசியம். உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பலருக்கு வேலை வழங்குபவர்களாக இருப்பதே நாட்டுக்குப் பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday 9 January 2016

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொற்கிழி!


விருதுநகர்: அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தலில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டி யிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,000 பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜன.,27, 28ல் போட்டிகல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கள் ஜன.,27ல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் ஜன., 28ல் , மாவட்டம் தோறும் கலெக்டரின் கூட்ட அரங்கில் நடக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், கூட்ட அரங்கில் வழங்கப்படும். நடுவர்களாக ஒன்பது தமிழாசிரியர்கள் இருப்பர். வெற்றி பெற்றவர் முடிவுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அறிவிப்பார்.விண்ணப்பிக்க அழைப்புஇதற்கான பரிசான பொற்கிழி, சான்றிதழ்களை அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார் பிறந்த நாட்களில் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார். 
போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா


சென்னை: சென்னை, அண்ணா பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, ஜன., 20ல் நடக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவை, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, வெள்ள பாதிப்பால் விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 20ல் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. 
அண்ணா பல்கலை வளாகத்தில், விவேகானந்தா கலையரங்கில் நடக்கும் விழாவில், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற, இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பி.இ.பி.டெக்., பி.ஆர்க்., ஆகியவற்றில் முதல் தரம் மற்றும் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும், நேரடியாக பட்டம் வழங்கப்படும். பிஎச்.டி., முடித்தவர்களுக்கும் நேரடியாக பட்டம் வழங்கப்படும்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.

தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள்அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.