தனித்தமிழ் வளர்ப்போம்


Friday 10 April 2015

செல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு


         செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது.
         இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். கணக்குத் தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதன்பிறகு, ரூ.100-க்கு மேல் விருப்பம் போல் தொகையைச் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 21-வயது வரை பணம் செலுத்தியதும், முதிர்ச்சித் தொகை,கூட்டு வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும். இந்தத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இது குறித்து தமிழக அஞ்சல் வட்டார தலைமை அலுவலகத்தினர் கூறியதாவது:தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 835 பெண் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 2.23 லட்சம் பேர் கணக்கினைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மண்டலத்தில் 1.72 லட்சம் பேரும், மதுரை மண்டலத்தில் 1.22 லட்சம் பேரும், கோவை மண்டலத்தில் 93 ஆயிரம் பேரும் இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், ரூ.84.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.10 வயது என்கிற குறி்ப்பிட்ட வரம்பு காரணமாக, இத்திட்டத்தில் கணக்குத் தொடங்க முடியாத பெண்குழந்தைகளின் பெற் றோரின் வருத்தத்தை உணர முடிகிறது. அதனால், 11 வயதைக் கடந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரமுடியும். இந்த சலுகை, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.இத்திட்டத்தின் கீழ் சேர்ந்தி ருக்கும் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் 18 வயது நிறைவடைந்ததற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு எடுக்கமுடியாது. ஒரு வேளை பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாவிட்டாலும், அதுவரை கட்டிய பணத்தை 21 வயதுக்குப் பிறகே எடுக்கமுடியும். ஆனால், இடையில் பணம் செலுத்தாத ஆண்டுகளுக்கு தலா ரூ.50 வீதம் அபராதம் செலுத்தவேண்டும். இத்திட்டத்தில் சேர, வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவை அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

       இதில் சேருவதற்கு, ரூ.1000 இல்லையென வருத்தப்படு வோருக்கு வேறு வழியைத் தபால் துறை காட்டுகிறது. இதன்மூலம் ரூ.50 செலுத்தி, அஞ்சலக சேமிப்புக்கணக்கைத் தொடங்க வேண்டும். அதில், கொஞ்சம், கொஞ்சமாக பணம் செலுத்தி ரூ.ஆயிரம் சேர்ந்ததும், அதைக் கொண்டு செல்வமகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.

படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது

     'இந்தியாவில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை, 90 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி என்பதில், இந்திய அரசு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது' என, 'யுனஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.


     'அனைவருக்கும் கல்வி, 2000 - 2015' என்ற பெயரில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான - யுனஸ்கோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை, 90 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது. அதேநேரத்தில், அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்பதில், குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும், மாணவர்கள் மற்றும் மாணவியர் எண்ணிக்கை, இந்தியாவில் சமமாக உள்ளது. இந்த விஷயத்தில், தெற்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில், இந்தியாவே முன்னணியில் உள்ளது.அனைத்து குழந்தைகளையும், மழலையர் பள்ளியில் சேர்ப்பது என்ற விஷயத்தில், உலக அளவில், 47 சதவீத நாடுகள் சாதனை படைத்துள்ளன. அதேநேரத்தில், இந்தியா உட்பட, 8 சதவீத நாடுகள், கிட்டத்தட்ட சாதனை அளவை எட்டி உள்ளன.
இருப்பினும், உயர் கல்வி கற்பதில், இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியா உட்பட, 32 நாடுகள் சாதனை படைக்க வேண்டும் எனில், நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.அனைத்து குழந்தைகளும், ஆரம்ப கல்விக்கு முந்தைய கல்வி, ஆரம்ப கல்வி மற்றம் இடைநிலைக் கல்வி கற்பதை, வரும், 2030ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.இந்தியாவில் அரசியல் ரீதியாகவும், மற்ற வகையிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி என்பதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, யுனஸ்கோ அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் அதிரடி முடிவு


      செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களை குறைவான கட்டணத்தில் பேச முடியும்.
     டிராய் வெளியிட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரோமிங்கில் இருக்கும்போது, லோக்கல் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் நிமிடத்திற்கு 1 ரூபாயிலிருந்து 0.80 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 1 ரூபாய் 15 காசுகளாகவும், இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 0.75 பைசாவிலிருந்து 0.45 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.ரோமிங்கில் உள்ளபோது லோக்கல் அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.00 ரூபாயிலிருந்து 0.25 பைசாவாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நீண்ட தூர அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 0.38 பைசாவாக அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.