தனித்தமிழ் வளர்ப்போம்


Monday 11 January 2016

இஸ்ரோவில் வாய்ப்பு

        திருநெல்வேலியில் செயல்படும், இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி..,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (மெக்கானிக்கல்) மற்றும் டெக்னீசியன் (மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்)
வயது வரம்பு: 31.12.2015 தேதி நிலவரப்படி 35க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகையும் உண்டு.
தகுதிகள்: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ படிப்பு. டெக்னீசியன் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ.,  படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 29
மேலும் விவரங்களுக்கு: www.iprc.gov.in

அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை

      லண்டன்: மென்சா அமைப்பு நடத்திய காட்டெல்-3பி அறிவுத்திறன் போட்டியில், மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான 162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 
    மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பிரணாப் முகர்ஜி


     ராஞ்சி: நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, 12 தங்க மெடல் வென்ற மாணவர்கள் உட்பட, 761 இளநிலை மாணவர்கள், 604 முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: 
        நாட்டில் கல்விதரம் குறைந்து வருகிறது. கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் இதனைத்தடுத்து, கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் அதிகளவில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது அவசியம். உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பலருக்கு வேலை வழங்குபவர்களாக இருப்பதே நாட்டுக்குப் பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday 9 January 2016

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொற்கிழி!


விருதுநகர்: அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தலில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டி யிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,000 பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜன.,27, 28ல் போட்டிகல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கள் ஜன.,27ல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் ஜன., 28ல் , மாவட்டம் தோறும் கலெக்டரின் கூட்ட அரங்கில் நடக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், கூட்ட அரங்கில் வழங்கப்படும். நடுவர்களாக ஒன்பது தமிழாசிரியர்கள் இருப்பர். வெற்றி பெற்றவர் முடிவுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அறிவிப்பார்.விண்ணப்பிக்க அழைப்புஇதற்கான பரிசான பொற்கிழி, சான்றிதழ்களை அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார் பிறந்த நாட்களில் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார். 
போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா


சென்னை: சென்னை, அண்ணா பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, ஜன., 20ல் நடக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவை, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, வெள்ள பாதிப்பால் விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 20ல் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. 
அண்ணா பல்கலை வளாகத்தில், விவேகானந்தா கலையரங்கில் நடக்கும் விழாவில், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற, இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பி.இ.பி.டெக்., பி.ஆர்க்., ஆகியவற்றில் முதல் தரம் மற்றும் தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும், நேரடியாக பட்டம் வழங்கப்படும். பிஎச்.டி., முடித்தவர்களுக்கும் நேரடியாக பட்டம் வழங்கப்படும்.

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.

தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள்அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. 
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழில்நுட்பம் வழியாக இலக்கியம் கற்கலாம்


கோவை: பாரதியார் பல்கலை தமிழ் துறை சார்பில், தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கியம் கற்பித்தல் என்ற தலைப்பில் பயிரலங்கு நேற்று துவங்கியது.
இரண்டு நாள் நடக்கும் இப்பயிலரங்கில், பல்கலை தமிழ் துறை தலைவர் ஜெயா பேசுகையில்வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் குறித்து கூறியவர், பாரதியார். ஒவ்வொருவரின் வாழ்விலும் பாரதியின் தாக்கம் இருக்கும். பாரதியாரின் பாடலையும், அவர் கூறிய கருத்துகளை அனைவரும் படிக்க வேண்டும். 
ஆனால், அவை இன்றளவும் மதிப்பூட்டப்படாமல் ஆவணக்காப்பகத்திலேயே கிடப்பில் உள்ளது. தற்போது உள்ள நவீன முறைக்கு ஏற்ப, அனைவரும் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில், தொழில்நுட்பத்தில் மூலமாக கணினிமயமாக்க உள்ளோம். அதற்கான, பயிற்சி வகுப்பில் முதல்கட்டமாக பாரதியின் குயில் பாட்டு, கணினிமயமாக்கவுள்ளோம்என்றார்.
பல்கலை பதிவாளர் செந்தில் வாசன், துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், இந்திய மொழிகளின் தரவக தலைவர் ராமமூர்த்தி, பேராசிரியர் சித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த விளையாட்டு நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி, அமைச்சர் ஜாவடேகர் மற்றும் அமைப்புகள், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பசங்க 2 படம்: 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது.




           இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா.படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதிஇலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சலுகை கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத் தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர் தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்:
நம் நாட்டில் தற்போது நடைமுறையில்உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்உள்ளன. குழந்தைகளின்,சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்பகல்வியும் மாறுபடுகிறது.

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்ஜனநாயக நாடு என கூறுவதற்கு,இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறைநிச்சயம் உதவாது.சமூகம்,பொருளாதாரம், மதம்,கலாசாரம் என, எந்தவகையிலும்,குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாதுஎன,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில்கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் கல்வி உரிமைசட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாககல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி,ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, நாடு முழுவதும்,ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடியகல்வியை வழங்க வேண்டும் என்பதையும்வலியுறுத்துகிறது.சமூக, பொருளாதார பாகுபாடுநீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமானபாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்அமல்படுத்த வேண்டும்.
பின்லாந்து,டென்மார்க், நியூசிலாந்து, நார்வே,கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்றநாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறைதான் அமலில் உள்ளது.உத்தரவிட வேண்டும்:அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரேமாதிரியானபாடத்திட்டத்தைஅமல்படுத்தும்படி, மத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுஅவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்காலவிடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும்இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தகங்களில் வரும் சோட்டா பீம்: கணிதம், ஆங்கிலம் கற்க உதவும் பீம்



சோட்டா பீம் கதாபாத்திரத்துடன், தொலைக்காட்சியில் வரும் தொடர்களையே பார்த்துகொண்டிப்பதால், குழந்தைகள் பாடங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.



            சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனமான டார்லிங் கின்டர்ஸ்லே கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, சோட்டா பீம் கதாபாத்திரம் இடம்பெறும் வகையில் 12க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த புத்தகங்களில் விளையாட்டாக ஆங்கிலம்கற்கவும், அதே வகையில் கணிதம் கற்கவும் ஏற்ற வகையில் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு தனியாகவும், 5 முதல் 7 வயது வரையானவர்களுக்கு தனியாகவும் இந்த புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏற்ற வகையில் எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் கொண்டதாக 104 பக்க அளவில் சோட்டா பீமும், நானும் என்ற பெயரிலும் ஒரு புத்தகம் தயாராகி வருவதாக தெரிகிறது.சோட்டா பீம் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான பின்னணி கொண்ட தகவல் களஞ்சியம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக இந்த கூட்டு நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்.....

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.


உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.

நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.

வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப்பகிரவும்
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....

மரம் வளர்ப்போம்!
மரம் வளர்ப்போம் உலகைக் காப்போம்!

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

       மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
        இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவுகளை கொண்டு வருவதை தடுக்க கடும் சோதனை: சிபிஎஸ்இ

        பள்ளி மாணவர்கள் ஜங்க் உணவு வகைகளைக் கொண்டு வருவதையும், பள்ளி கேன்டீன் மற்றும் 200 மீட்டர் பரப்பில் ஜங்க் உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சிபிஐஎஸ் பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
          பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பரிசோதித்து, அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி நிர்வாகம் கூறியுள்ளது.
அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் இருக்கும் உணவு பொருட்கள் காரணமாக இரண்டாம் நிலை நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மாணவர்களுக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி கேன்டீன்களிலும் ஜங்க் உணவுகள் விற்பதை தடுக்கவும், சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

  பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும்கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது.பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள் பல்கலைக்கு, யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது.


இனி எங்கள் பல்கலைக்கு, புதிய படிப்புகள், ஆசிரியர் நியமனம், ஆய்வகம்,ஆராய்ச்சி என, பல மேம்பாட்டு திட்டங்களுக்கும், மத்திய அரசின் நிதி கிடைக்கும்.இதையடுத்து, தேசிய மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலான, 'நாக்' அனுமதி பெற உள்ளோம். இந்த அங்கீகாரம் கிடைத்தால், எந்த படிப்பையும், எங்கள் பல்கலையில் துவங்க முடியும்.வரும் கல்வி ஆண்டில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் அனுமதி பெற்று, பி.எட்., நேரடி வகுப்புகளைதுவங்க உள்ளோம். பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., படிப்புடன், பி.எட்.,படிப்பும் இணைந்து படிக்கும் வகையில், ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பாக நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday 6 January 2016

சல்லிக்கட்டும் உலக அரசியலும்

          இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள்.
ஆகையால் சிறிது நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective breeding);

   இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).
 
   இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும்.

   சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.

   தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.

    தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு !

          ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய்
மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.

அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.

இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).

கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.

இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..

கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.

உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்

 ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு


உலகளவில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டுள்ள, இந்திய ரயில்வேயில்  பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
மொத்த காலிப்பணி இடங்கள்: 18,252.
பணியிடங்கள்: கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், போக்குவரத்து உதவியாளர், சீனியர் டைம் கீப்பர் மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்.
வயது வரம்பு: 18 முதல்  32 வயதுக்கு உட்பட்டவர்கள். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ‘கணினி வழித் தேர்வு’ அடிப்படையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வின்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை.
அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது. 

இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

உன் மனத்திருப்திகாக ....

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க ,
ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு!


புதுச்சேரிதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வான குளூனி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்களை குறிஞ்சி நகரில் உள்ள புதுச்சேரி அறிவியல் இயக்கத்தில் நடந்த விழாவில் வழங்கினர்.
புதுவை அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து 23 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு தலைப்பாக தட்ப வெப்ப நிலையையும் கால நிலையையும் புரிந்துகொள்வோம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதிகளில் வழிகாட்டி ஆசிரியர் களுக்கு பயிற்சியளித்து, மாவட்ட மாநாடுகள் நடந்தன. இதில் 158 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 27 ஆய்வுத் திட்டங்கள் நவம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நடந்த மாநில மாநாட்டில் பங்கேற்றன. அவற்றில் சிறந்த 6 ஆய்வுகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் டிசம்பர் 27 முதல் 31 வரை சண்டிகரில் 23வது அகில இந்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. புதுச்சேரியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் சுதர்ஷன் தலைமையில் புதுச்சேரி, காரைக்கால், மாகியில் இருந்து 6 மாணவர்களும் இரு வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதிலிருந்தும் 700 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கபட்டன. இவற்றில் இருந்து சிறந்த 16 ஆய்வறிக்கைகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. 
அவற்றில் மாணவி ஓவியா தலைமையிலான ஆய்வு (வெவ்வேறு வெப்பநிலையில் கத்திரிசெடியின் வளர்ச்சி குறித்த ஆய்வு) அறிக்கை தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் துவாரகநாத் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும்
சூடப்படுகின்றது?
இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.


பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.


கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா?? 

ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது !

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்
காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

சிடி ஸ்கேன் 

தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது. 

கலர் டாப்லர் ஸ்கேன். 

ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது. 

எக்கோ

இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும். 

டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும். 

இசிஜி


இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது. 

டிஜிட்டல் இசிஜி

இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும். 



டிஜிட்டல் எக்ஸ்ரே

சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது. 

மோமோ கிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. 

மாஸ்டர் ஹெல்த செக் அப்

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

"ரேடியோவ கண்டுபுடிச்சது மார்க்கோனி, ஆனா அத கேக்க வச்சது இசைஞானி"

1976 மே 14, பண்ணைபுரம் ராசய்யா இளையராஜாவாக அன்னக்கிளியில் அறிமுகமாகி
இன்று ஆயிரமாவது படத்தில் தாரை தப்பட்டையைக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமையுடன் பொங்கலன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியானது. கிராமிய மணம் வீசும் வகையில் இதன் பாடல்கள் அமைந்துள்ளன.

பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழுப் படத்தையும் எடுத்து இசையமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதைப் பார்த்து கதையின், காட்சியின் தன்மையை  உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். 

இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழுக்கதையையும், காட்சிகள் பற்றியும், அந்தக் காட்சிகளை பாலா எப்படிப் படமாக்குவார் என்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா, சில முக்கிய காட்சிகளைக் கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து படப்பிடிப்புக்கு முன்பே அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்

பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளைப் படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளில். பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்தக் காட்சியைப் படமாக்கும் புதிய முறை இது. தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி, அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜா, முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.

எந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.

இப்படத்திற்காக "பாருருவாய பிறப்பற வேண்டும், பத்திமையும் பெற வேண்டும்..." என்ற திருவாசக  வரிகளுக்கு இசையமைத்துள்ள ராஜா "என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்... அது இந்த கீதம் அல்லவா.." என்ற உருக்கமான  பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின்  ஐநூறாவது படமான அஞ்சலி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமமில்லாமல் பல விருதுகளை வென்று ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட படமாக அமைந்ததற்கு ராஜாவின் இசையும் ஒரு காரணம். அது போலவே தாரை தப்பட்டை படமும் அமையும் வகையில் அருமையான இசையைக் கொடுத்திருக்கிறார்.

"ரேடியோவ கண்டுபுடிச்சது மார்க்கோனி, ஆனா அத கேக்க வச்சது இசைஞானி" என தன் பாடல்களால்  எண்பதுகளை ரேடியோவில் ஆண்ட இளையராஜா இன்று ஐ-ட்யுன்சிலும் இளைய தலைமுறைகளை தன் இசையால் ஈர்த்துள்ளார். பல இளம் இசையமைப்பாளர்களின் படங்களுக்கு மத்தியில் வெளிவந்த தாரை தப்பட்டை தொடர்ந்து ஐ-ட்யுன்சில் முன்னிலையில் இருப்பதே இளையராஜாவின் சிறப்பு.

ஐந்து படங்களிலேயே சரக்கை இழந்து வரும் இளம் இசையமைப்பாளர்களுக்கு இடையே தன் ஆயிரமாவது படத்திற்கும் முதல் படம் போல் இசையமைத்திருக்கும் ராஜா, ராஜா தான் ...