தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 21 April 2016

அன்பே கடவுள்

தேநீர் குடிக்கலாம்...
ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு....நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்..

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப் படுத்தியது..

இந்த நேரத்தில், யாராவது ஒரு ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது..ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்தும்..

அவர்கள் பொருட் படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு பாழடைந்த ஒரு சிறிய கடை போல் தோற்றம் கொண்ட ஒரு வடிவை கண்டார்கள்.. அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது..
ஆனால் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது..

"அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை" ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கோம்...என்றார் மேஜர்..

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்..சார், இது ஒரு தேனீர் கடை தான்..உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்.  நாம் பூட்டை உடைக்கலாமே...
என்றார்..

இது ஒரு தர்ம சங்கட நிலை அவருக்கு.. தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா என்று குழம்பினார்...

சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.. வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார்..

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே ஒரு தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டும் இருந்தது..

எல்லோரும் தேனீர், பிஸ்கெட் நன்றாக அனுபவித்து புறப்பட தயாராகினார்கள்..

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..
இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க, அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அந்த கவுண்டரில் இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சி துறந்து , புறப்பட்டார்..

அடுத்த மூன்று மாத காலத்தில் அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்குள்ளாக்கூடிய அந்த இடத்தில் பணியாற்றி, யாருக்கும் உயிர் சேதம் வராமல் இருக்க, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது..

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை,,ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்..

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச் சொன்னார்.

எல்லோரும் தேனீர் பிஸ்கெட் உணடு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.. மிகவும் நிறைந்த நெஞ்சுடன் கடவுள் பக்தியும் இருந்தது..

என் மதிப்பிற்குரிய நண்பர் திரு..சாருஹாசன் போன்ற எண்னம் கொண்ட ஒரு வீரர் கேட்டார்... ஹே தாத்தா... கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உன்னை இப்படி இங்கே இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்.....என்று...

அப்படி சொல்லாதீர்கள் மகனே..கடவுள் நிச்சயம் இருக்கிறார்..அதற்கு என்னிடம் சான்றே இருக்கு..

மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், ஒரு விஷயம் தேவைப்பட்டதால் எனது மகன் மிகவும் அதிக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டான்...
நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..

என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..

கடவுளிடம் கதறி அழுதேன்.. ஐயா கனவாங்களே , கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்.. நான் அழுது ஆற்றிக் கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது..

நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..
கடவுள் இருக்கிறார்..என்றும் இருக்கிறார்.. இதை விட என்ன சொல்ல..
என்று முடித்தார் அவர்..

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது..

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன..
அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை அவர்கள் உணர்ந்தார்கள்..

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்..

அந்த முதியவரை தழுவிக்கொண்டு, ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்..கடவுள் இருக்கிறார்... தாத்தா... உங்கள் தேனீர் மிக அபாரம்...
இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஒரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை..

இதில் இருக்கும் உண்மை என்ன என்றால்..

நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்...என்பதே..

இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..மார்க்கம் கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி.

அன்பின் வடிவே தேசமாகட்டும்...

அரைகுறை ஞானம்

பயப்படுவது சரியா ?

சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார்.


எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார்.

ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார்.

அருகே அவரது பாம்புக்கூடை.

சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது.

பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு வயதுக் குழந்தை.

தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது.

இந்தப் பாம்பைப் பார்த்ததும், ‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.

அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார்.

அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை.

பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள்.

‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார்.

பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.

‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’

பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை.

பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை.

இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுவது .

NOTA தகவல்கள்


பொதுமக்கள் மத்தியில் NOTA பற்றி பல நம்பிக்கைகள் நிலவுகின்றன.
அவற்றில் முக்கியமான இரண்டைப் பார்ப்போம்: 1. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட NOTA வாக்குகளின் எண்ணிக்கை அதிகமென்றால், அந்தத் தேர்தலை செல்லாததாக்கி மறுதேர்தல் நடத்துவார்கள். 2. அத்தொகுதியில்
NOTA எண்ணிக்கையை விட குறைவாக ஓட்டு வாங்கியவர்கள் தம் வாழ்நாள் முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுவார்கள்.

இவை இரண்டுமே ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லாத மூட நம்பிக்கைகள்.

உண்மையில் முதலில் மொத்த வாக்குகளில் NOTAவுக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை கழிக்கப்பட்டு விடும். ஏற்கனவே சொன்னது போல் NOTA என்பது ஓட்டு அல்ல; ஓட்டு போடவில்லை என்ற கணக்கு தான். அதனால் அதை ஒதுக்கி விட்டு மற்ற வாக்குகளைக் கொண்டே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். ஒருவேளை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 90% NOTA என்றாலும் மீதமிருக்கும் 10% வாக்குகளில் அதிக வாக்கு பெற்றவர் எவரோ அவரே தேர்தலில் வெற்றி பெற்றவர். இது தான் NOTAவின் இன்றைய நிலை.

தொகுதியில் ஒருவர் மட்டும் தான் நிற்கிறார் என்றால் அவரே போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார். NOTA எத்தனை பதிவாகி இருந்தாலும் பிரச்சனை இல்லை.

இன்னும் சொல்லப் போனால் ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் நிற்க செலுத்திய செக்யூரிட்டி டெபாஸிட் தொகையைப் பெற மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளேனும் பெற வேண்டும், அதைக் கணக்கிடக் கூட தேர்தல் ஆணையம் NOTA-வுக்கு விழுந்த வாக்குகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள வாக்குகளை மட்டும் தான் மொத்த வாக்குகளாய் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

அடுத்து NOTA பற்றிய அவநம்பிக்கையைப் பார்க்கலாம். இத்தனை பலவீனமான, எந்த நேரடிப் பயனும் இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன் என் ஓட்டை வீண் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது.

இப்போதைக்கு NOTA பலகீனமானது தான். ஆனால் ஒன்றுமே இல்லாதது அல்ல.

முதன்மையாக NOTA போடுவதனால் ஏற்படும் இரண்டு உடனடிப் பயன்கள் உண்டு: 1. நீங்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து விட்டீர்கள். 2. வேறு ஒருவர் உங்கள் ஓட்டைப் போடுவதைத் தவிர்த்து விட்டீர்கள்.

இவற்றைத் தவிர்த்து இப்போதே ஒரு மறைமுகப் பயன் இருக்கிறது. அது உங்கள் தொகுதியில் ஒருவர் கூட தகுதியான வேட்பாளர் / கட்சி இல்லை என நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்ற கணக்கு தேர்தல் முடிவு வெளியானதும் தெரிய வரும். அந்த எதிர்ப்பு முகம் முக்கியம் ஆகிறது.

ஒருவேளை கணிசமான எண்ணிக்கையில் ஒரு தொகுதியில் NOTA பதிவாகிறது எனில் (இப்போதைக்கு சுமார் 10% என்றாலே கூட) யாரோ ஒருவர் ஜெயித்தாலும் அது வேட்பாளரை நிறுத்திய அரசியல் கட்சிகளுக்குப் பெரிய அடி தான். அப்படி ஏன் கணிசமானோர் எதிர்த்தனர் என ஆராய முற்படுவர். மக்களிடம் கருத்தறிய முயல்வர். எல்லா கட்சிகளுமே அடுத்த முறை அங்கு வேட்பாளர் நிறுத்துகையில் கவனமாய் இருப்பர். அடுத்து மக்களிடையேயும் இத்தனை பேர் NOTA பதிந்தது தொடர்பாய் விழிப்புணர்வு ஏற்படும். நாமும் தேவைப்பட்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம் எனத் தோன்றும். இது தான் மாற்றத்தின் ஆரம்பப்புள்ளி.

இவை தவிர, எதிர்காலத்தில் சில விளைவுகள் / மாற்றங்கள் சாத்தியமுண்டு.

பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப்பணிந்தது மத்திய அரசு.

        தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.முன்னதாக, பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.


புதிய கட்டுப்பாடுகள்:

  தொழிலாளி ஒருவர் தொடர்ந்து 2 மாதகாலம் தொடர்ந்து பணியில் இல்லையெனில் தனது பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும் பணியில் இருப்பவர்கள் 54வயதை எட்டினால் பிஎஃப் பணத்தைப் பெற முடியும் என்ற விதியும் இருந்தது.இதனை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி பணியில் இருந்து விடுபட்டு விட்டாலும், பிஎஃப் பணத்தை 58 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட 57 வயதுக்குப் பிறகுதான் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு:

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொழிலாளர்கள் தங்கள் சொந்த உழைப்பில் ஈட்டும் பணத்தைத் திரும்பப் பெற அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.இந்த எதிர்ப்பை அடுத்து, புதிய விதிகள் அமலாக்கத்தை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிய விதிகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பெங்களூரில் வன்முறை:

    இந்நிலையில், பிஎஃப் புதிய விதிகளைக் கண்டித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25-க்கும்மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது.பெங்களூரு பொம்மனஹள்ளியில் திங்கள்கிழமை 5 தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்கூரு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகளுக்குத் தீ வைத்தனர். இதில் 6 அரசுப் பேருந்துகளும் ஒரு மாநகரப் பேருந்தும் தீக்கிரையாயின.அதேபோல், ஒசூர் சாலையில் உள்ள ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாயின. இந்த வன்முறையால் பெங்களூருக்கு பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் மாணவி காயம்:

ஹெப்பகோடியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது கல்லூரி மாணவி பிரீத்தி (18) என்பவரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பணிந்தது மத்திய அரசு:

    பெங்களூர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:பிஎஃப் விதிமுறைகள் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளே தொடரும். தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்த அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு (பெங்களூரு வன்முறைக்கு) முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரு தத்தாத்ரேயா, "பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அமல் மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்திவைக்கப்படுகிறது' என்று கூறியிருந்தார்.எனினும், எதிர்ப்பு கடுமையானதை அடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டது.

கூடுதல் சலுகைகள் தரவும் முடிவு

     புதிய விதிகளை திரும்பப் பெறுவதுடன் பிஎஃப் பணத்தில் புதிய சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்கவும் பரிசீலித்து வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி, வீடு வாங்குவது, தீவிரமான உடல்நலக் குறைவு, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை முழுமையாகத் திரும்ப எடுப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சட்டத் துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லவை கற்போம்!

நல்லவை கற்போம் ! - வெ.இறையன்பு


நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும், உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன் அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது. நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது, எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம் புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்விட்டது.


வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர் உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை. இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும் ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும் மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில் மிதப்பதைக் கவனிக்க முடியும். வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்; குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம் என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்.

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.

மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.

நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்.

அமைதி


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி
வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.
இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.
“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”
“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,
“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…
அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.
அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

செத்த பாம்பு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
***
#சந்தோசமாய் இருங்கள்,..

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.


காரைக்குடி அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை தலைவர் சேகர் கூறியதாவது:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு, நான்கு முறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த பரிசோதனை செலவுகளை குறைக்கும் வகையில், குறைந்த செலவில் மின்னணு கருவிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், 30 லட்ச ரூபாய் செலவில் மேற்கொண்டு வந்தோம்.அதன்படி, குளுக்கோ மீட்டர் உணர் கருவிகள், ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைத்துள்ளோம். சர்க்கரை நோயாளிகளுக்கு, ஊசி மூலம் ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.

மூச்சு காற்று மூலமாக சர்க்கரை நோயின் அளவை கண்டறிவதற்கான அடுத்த கட்ட ஆராய்ச்சியில் எங்கள் துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய, குறைந்தபட்சம், 25 முதல் 30 ரூபாய் வரை செலவாகிறது.