கோவை மாவட்டத்தில், பி.எட்., பட்டம் பெற்று, 8,764 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் தெரியவந்துள்ளது.
தொடரும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு,டெட் தேர்வு, கல்வி காலம் உயர்வு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை நடப்பு கல்வியாண்டிலும் சரிந்துள்ளது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ்,தமிழகம் முழுவதும், 726 பி.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சம் பேர் பி.எட்.,பட்டம் பெற்று வெளிவருகின்றனர். 2003ம் ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பி.எட்.,கல்லுாரிகளின் எண்ணிக்கை குறைவு இதனால், பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு எளிமையாக இருந்தது.
ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பின், தமிழகத்தில் தனியார் பி.எட்., கல்லூரிகள் தொடங்க தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் அனுமதி அளித்தது. தொடர்ந்து, புற்றீசல் போல் பல்வேறு தனியார் பி.எட்., கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலும் நீண்டு வருகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவால் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு,கட்டாய டெட் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பின்மை, இரண்டாண்டு கல்விக்காலம் உயர்வு போன்ற காரணங்களால், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக சரிந்தது.
நடப்பு கல்வியாண்டில், 60 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்றி மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளது.
கல்வியாளர் பிரபாகரன் கூறுகையில், நடப்பு கல்வியாண்டில், அரசு பி.எட்., கல்லுாரிகளில் மட்டுமே இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மாணவர்கள் சேர்க்கை இன்மையால் தனியார் கல்லுாரிகள் மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த, ஜூலை நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மட்டும், 8,764 பேர் பி.எட்., முடித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தமிழகத்தில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 991 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது, என்றார்.
No comments:
Post a Comment