தனித்தமிழ் வளர்ப்போம்


Friday, 23 January 2015

ஃபுட்போர்டு மாணவர்களுக்கு ஆப்பு.. படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் இலவச பஸ் பாஸ் ரத்து!

         பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. படிக்கட்டில் பயணம்..நொடியில் மரணம் என்று எத்தனை இடங்களில் எழுதி வைத்தாலும் புட்போர்டு பயணம் என்பது தொடர்ந்தபடிதான் உள்ளது. குறிப்பாக சென்னையில், மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி பயணிப்பதும், வன்முறை மற்றும் மோதல்களில் ஈடுபடுவதும், பயணிகளுக்கு இடையூறு செய்வதும் அதிகரித்தபடி உள்ளது.

இதையடுத்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உருவாக்க, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள்அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள இந்தச் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய குறிப்புகள்மாணவர்கள் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

2 ஆவது முறையாக வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவரின் அடையாள அட்டை, இலவச பஸ்பாஸ் ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவரின் டி.சி கொடுக்கப்பட்டு, படிப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவார். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படும். மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க மாநகர போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுபடிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கும். அதன் பேரில் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவனின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும். பஸ் டே கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு தனியாக மாநகர பஸ்களை இயக்குவது அடிக்கடி பிரச்சினை ஏற்படும் வழித்தடங்களில் கதவு வைத்த பஸ்களை இயக்குவது ஆகிய நடைமுறைகளை பின்பற்றும்படியும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment