தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 12 March 2015

+2 பாடத்திட்டம் மாறுமா?

   மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களும் அதனால் ஏற்படும் புரிதலும் முக்கிய பங்கு வகிப்பவை. இந்த பாடங்கள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப உரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம் பல வருடங்களாக மாற்றப்படாமல் உள்ளது.

   இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், "காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவுவது அவர்களின் பாடத்திட்டமே. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாட நூல்களை தயாரிக்கும் முறையையே கல்வித்துறை கையாண்டு வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளி வராமலே உள்ளது" என்றார்.

கல்வியாளர் ராஜகோபாலன் இது தொடர்பாக கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடத்திட்டம் இந்த வருடம் புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். பாடத்திட்டம் தயாரிக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு வரைவு பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசிடம் இன்னும் கல்வித்துறை ஒப்புதல் பெறாததால் புத்தகஙள் அச்சிடப்படாமல் உள்ளன. அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பாடத்திட்டம் பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

  இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா கூறுகையில் பாடத்திட்டம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளிவராததால் பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வருடம் பாடத்திட்டம் மாற்றப்படாததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.              நன்றி:புதிய தலைமுறை

No comments:

Post a Comment