தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 18 December 2014

கும்பகோணம் பள்ளி தீ விபத்து : தண்டனை பெற்ற பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீன் மறுப்பு

           கும்பகோணம் அரசு உதவிபெறும் பள்ளியில் 94 குழந்தைகள் பலியான தீவிபத்தில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேருக்கும் ஜாமீன் மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளியும், சரஸ்வதி வித்யாலயா கிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியும் செயல்பட்டு வந்தன.இதில், சரஸ்வதி விதியாலாயா கிருஷ்ணா அரசு உதவிபெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். மேலும் 18 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். கும்பகோணம் கிழக்கு போலீஸார், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கப்பதிவு செய்தனர். இவர்கள் மீதான வழக்கு தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கில், 2015 ஜூலை 30-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்டிருந்த மாவட்ட தொடக்கக்ல்வி அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்தும், பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாத்தலட்சுமி உள்ளிட்ட 8 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பொறியாளர் ஜெயச்சந்திரன் மட்டும் அன்றைய தினமே, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி நிறுவனர் உள்ளிட்ட 9 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் செல்வம், வாசுகி அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த 9 பேருக்குமான தண்டனையை நிறுத்தி வைக்க கூடாது, 8 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்கோர்ட்டில் 11 பேருக்கு வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்தும் அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், 8 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும் இமமனு மீதான இறுதி விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment